உயரும் வெப்பம்... வேலூரில் நேற்று 104 இன்று 108 டிகிரி! சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சதம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. 10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் சுட்டெரித்தது.
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை கோடை வெப்பம் வாட்டி வதைப்பது இயல்பு.
குறிப்பாக மே மாதம் சூரியன் அதிகபட்ச சூட்டை இந்திய துணை கண்டத்தின் மீது இறக்கிவிடும். இதற்காகவே பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறைகள் அறிவிக்கப்படுன்றன.
வாட்டி வதைக்கும் வெப்பம்... நீலகிரியில் அடைக்கலமாகும் பிற மாவட்ட மக்கள்! களைக்கட்டிய கோடை சீசன்
வெயிலும் மழையும்
ஆனால், ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தின் பிற்பகுதி மற்றும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதிகளில் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்தது. சில நாட்களுக்கு முன்புகூட தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால், அந்த மழையால் ஏற்பட்ட குளிர்ச்சி அடுத்த ஒரு நாளுக்கு கூட தாக்குப்பிடிக்கவில்லை.
வேலூர், திருச்சியில் உச்சபச்சம்
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வழக்கம்போலவே அதிகபட்சமாக வட மாவட்டமான வேலூரில் 42.2 டிகிரி செல்சியஸ், அதாவது 107.96 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. தஞ்சாவூர், திருச்சி மற்றும் கரூர் பரமத்தியில் சற்று குறைவாக 104 டிகிரி வெயில் வாட்டி வதைத்து இருக்கிறது.
100-ஐ தாண்டிய மாவட்டங்கள்
அடுத்ததாக மதுரை விமான நிலையம் பகுதியில் 103.46, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 103.1 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. மேற்கு மாவட்டமான ஈரோடு 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும், சேலத்தில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலும் சூரியன் சுட்டெரித்து இருக்கிறது. தருமபுரியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும்,
தலைநகர் சென்னை
சென்னையை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 97.7 ஃபாரன்ஹீட் அளவிலும் வெப்பம் வதைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் மொத்தம் 10 மாவட்டங்களில் 100 டிகிருக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கூலாக இருக்கும் பகுதிகள்
தமிழ்நாட்டின் குளிர் பிரதேசங்களான ஊட்டியில் 75.38 ஃபாரன்ஹீட் வெப்பமும், வால்பாறையில் 84.2 ஃபாரன்ஹீட் வெப்பமும், குன்னூரில் 77.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், கொடைக்கானலில் 71.06 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டவுடன் ஊட்டி, கொடைக்கானல் என குளிர் பிரதேசங்களுக்கு சென்று வெயிலுக்கு விடுமுறை அளிக்க மக்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.