ஒத்தைக்கு ஒத்த.. என் டார்கெட் ஸ்டாலின் இல்ல.. அதானி தான்.. திருவொற்றியூர் 'ரகசியம்' உடைத்த சீமான்
சென்னை: அதானியை எதிர்ப்பதற்கே திருவொற்றியூர் தொகுதியில் நிற்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. வெற்றி பெறுவார்கள் என்பதற்காக அல்ல.
மற்ற கட்சிகளின் வாக்குகளை பிரித்து, பெருத்த சேதாரத்தை ஏற்படுத்துவார்களா என்பதை பார்ப்பதற்காக.
ஒரே மேடையில்
இந்த தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. ராயப்பேட்டை உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் சீமான் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்.
கேலி கிண்டல்
117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, திருவொற்றியூர் தொகுதியில் தான் போட்டியிடுவதாக சீமான் அறிவித்தார். கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து களம் காண்பேன் என்று அறிவித்திருந்த சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததை பலரும் கேலி, கிண்டல் செய்தனர்.
திருவொற்றியூர் ஏன்?
இந்நிலையில், அதானியை எதிர்ப்பதற்காகவே, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் தெரிவித்துள்ளார். இதனால் தான், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாமல், திருவொற்றியூரில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
திமுக ஒப்பந்தம்
மேலும் அவர் கூறுகையில், எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அங்கு களமிறங்குகிறேன். அங்கு 350 ஏக்கர் நிலத்தை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அதானிக்குக் கொடுத்துள்ளனர். அங்கு புதிதாக எதையும் தொடங்க முடியாது. ஆனால் விரிவாக்கம் செய்யலாம் என ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
எதிர்க்க வேண்டிய கட்டாயம்
இதற்காக கடலுக்கு அடியில், நிலத்தில், நதியில் என கிட்டத்தட்ட 6000 ஏக்கரில் துறைமுக விரிவாக்கப் பணிகளை அந்நிறுவனம் மேற்கொள்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மோசமான நிலை உருவாகியுள்ளது. அதானி வந்துவிட்டால், மற்ற துறைமுகங்களை மூடிவிடுவார்கள். இதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் போட்டியிடுகிறேன்" என்று திருவொற்றியூர் ரகசியத்தை பிரேக் செய்துள்ளார் சீமான்.