நீங்க இல்லைனா எப்பவோ பாட்டு கேக்குறத நிறுத்தியிருப்போம் சார்.. KJ யேசுதாஸ் பிறந்தநாள் இன்று
சென்னை: 1960ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மாயக்குரலால் மனதை மயக்கும் கான காந்தர்வன் கேஜே யேசுதாஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று. நீயும் பொம்மை என ஆரம்பித்த இசைவேந்தனின் இனிய பல சுவாரசிய தகவல்களை தற்போது பார்க்கலாம்..
புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும் கர்நாடக இசைக் கலைஞருமான கேஜே யேசுதாஸ் கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவர். மலையாள மண் தந்த மாபெரும் பொக்கிஷம் அவர். ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக தனது கணீர் குரலால் சோகம் காதல் அழுகை என பல்வேறு கட்டங்களை இறங்கி அடித்து கலக்கிய அவர் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
பக்தி மணம் கமழும் தெய்வீகமாகட்டும், காதல் கரையும் டூயட்டாகட்டும், இல்லை இளசுகளை கிறுக்கேற்ற வைக்கும் பாடல்களாகட்டும் யேசுதாஸ் என்றால் யேசுதாஸ் மட்டும் தான்.. ஹரிவராசனம் பாடி உருகவும் வைப்பார், மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே என கிறங்கவும் வைப்பார், தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான் என கேட்பவர்களையே கன்றுக் குட்டியாக துள்ளவும் வைப்பார். தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் கான கந்தர்வன் என அழைக்கப்படுகிறார்.

ஏசுதாஸ் எனும் இசை அரக்கன்
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னராக விளங்கிய எம்ஜிஆருக்கு இவர் பாடிய இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் பாடலும், மலரே குறிஞ்சி மலரே பாடல் வரிகள் தமிழ் திரையுலகின் எவர் கிரீன் ஹிட்டுகள், கண்ணதாசனின் கடைசி பாடலான கண்ணே கலைமானே பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்கமுடியாது வாழ்வே மாயம் பாடலை கேட்டு அழாதவர்கள் இருக்க முடியாது . பூவே செம்பூவே பாடலை கேட்டு உருகாதவர் இருக்க முடியாது செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலை கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

ஆல் டைம் பேவரிட் பாடல்கள்
ஃபாரின் சாங் என்றால் அக்கரைச் சீமை அழகினிலே, காதல் ரசம் சொட்ட வேண்டுமென்றால் என் இனிய பொன் நிலாவே, என இவர் இறங்கி அடிக்காத ஃபீல்டே கிடையாது. இவ்வளவு ஏன் தற்போது வரை தண்ணீர் தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி பாடலை அடித்துக் கொள்ள வேறு எந்த பாடலும் கிடையாது இப்படி 60ஸ் கிட்ஸ், 70ஸ் கிடஸ் தொடங்கி 90 கிட்ஸ் 2k கிட்ஸ் வரை அவர் இசை இமயம் தான். தளபதி படத்தில் காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாடலில் எஸ்பிபி காம்போவை பற்றி சொல்லவா வேண்டும்.

பக்தி பரவசம்
சபரிமலை ஐயப்பனை இன்று வரை தூங்க வைப்பவர் இயேசுதாஸ் என்ற இசை ராட்சஷன். அவரது ஹரிவராசனம் பாடலை கேட்டுதான் ஐயப்பனே கண்மூட செல்வார். அந்த அளவுக்கு அய்யப்ப பக்தராக திகழ்ந்த இவர் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர். ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் என சபரிமலையில் அந்தப் பாடலைக் கேட்கும் போது எழும் உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இது மட்டுமல்ல பல கோயில்களிலும் தற்போது வரை ஒழிப்பது யேசுதாஸின் தெய்வீகக் குரல் தான்.

இமலாய சாதனை
திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி யுள்ளார். சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான "பத்ம பூஷன்" மற்றும் "பத்ம ஸ்ரீ" விருது வழங்கப்பட்டது.

7 முறை தேசிய விருதுகள்
எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் ஏழு முறை "தேசிய விருதுகளையும்", நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்து உள்ளார். அற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்குபவர் கே.ஜே. யேசுதாஸ். கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர். ஐந்து வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை தந்தையிடம் கற்றார்.

திரை அறிமுகம்
திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார். சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் இசை பயின்றார். முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் 'நீயும் பொம்மை, நானும் பொம்மை' பாடலின் மூலம் அறிமுகமானார். 1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.

அள்ளிக்குவித்த விருதுகள்
உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 1965-ல் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரஷ்ய அரசு இவரை அழைத்திருந்தது. இன்டர்நேஷனல் பார்லிமன்ட் ஃபார் சேஃப்டி அன்ட் பீஸ் அமைப்பின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971-ல், இந்திய-பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றபோது, கேரளா முழுவதும் தன் இசைக் கச்சேரிகள் நடத்தி பிரதம மந்திரி யுத்த நிதிக்காக பணம் திரட்டினார். கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications