மறக்க முடியுமா இந்த நாளை?.. சுனாமி அரக்கன் உயிர்களை பறித்த தினம்..தமிழகம் முழுவதும் மீனவர்கள் அஞ்சலி
சென்னை; 2004ம் ஆண்டு இதே நாள்.. நமது மனதில் என்றும் மாறாத சோகச் சுவடுகளை பதித்து விட்டு சென்ற தினம். சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்த தினம்தான் இன்று.
சுனாமி காரணமாக தமிழகத்தின் சென்னை, கடலூர், புதுக்கோட்டை , நாகை,மற்றும் கன்னியாகுமரி கடலோர பகுதிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இதிலும் நாகை மாவட்டம் மிக பெரிய பேரழிவுக்கு உள்ளானது.

சுனாமி நினைவு தினம்
சுனாமி ஆழிப் பேரலையில் நாகை மாவட்டத்தில்மட்டும் 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி சுனாமி நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாகை மாவட்டம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது . நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகை ஆரிய நாட்டு தெரு, செருதூர், நாகூர், நம்பியார்நகரில் சுனாமியின் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு அவர்களது உறவினர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வலமாக சென்று அஞ்சலி
இதேபோல் கீச்சாங்குப்பம் கிராமத்தில் சுனாமியில் உயிர்நீத்தவர்களுக்கான உறவினர்கள் திதி கொடுத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அக்கரைப்பேட்டை மீனவர்கள் நூற்றுகணக்கானோர் மெளன ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நம்பியார் நகர் மீனவ கிராம மீனவர்கள் நூற்றுகணக்கானோர் ஊர்வலம் சென்று சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

மீன்பிடிக்க செல்லவில்லை
அதிமுக சார்பிலும் நாகை அக்கரைப்பேட்டையில் முன்னால் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாகை மாவட்டம் முழுவதும் சுனாமி நினைவு தினம் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 17ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் மீனவர்கள் உயிர் நீத்தவர்களுக்கு கடலில் பால் தெளித்து அஞ்சலி செலுத்தி ஆன்மா சாந்தி அடைய வேண்டி வேண்டிக்கொண்டனர்.

தூத்துக்குடி, கடலூர்
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதனால் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை. மேலும், சென்னை கடற்கரை பகுதிகள், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழகம் முழுவதும்உள்ள மீனவர்களும் இன்று துக்கம் அனுசரித்தனர்.












Click it and Unblock the Notifications