சென்னையில் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்! வரியை எப்படி செலுத்த வேண்டும்! மக்களே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுவன வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். எனவே, சென்னைவாசிகள் இதுவரை சொத்து வரி செலுத்தாமல் இருந்தால் இன்றைய தினம் செலுத்திவிடுங்கள். வரி பாக்கியை மாநகராட்சி அலுவலகங்கள், இ சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம் மூலமாகச் செலுத்தலாம்
சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமைதாரர்கள், வணிக நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒரு முறை, அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒரு முறை என மொத்தம் இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி
அதன்படி சென்னையில் உள்ளவர்கள் சொத்து வரி செலுத்த இன்று மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும். சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரைச் சொத்து வரி என்பது தான் மாநகராட்சிக்குப் பிரதான வருவாயாக இருக்கிறது. மாநகராட்சியின் வருவாயில் சுமார் 35% சொத்து வரி மற்றும் தொழில் வரி மூலமே கிடைக்கும் நிலையில், சொத்து வரி வசூலிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி
இந்த முறை கடைசி தேதியான இன்று ரமலான் பண்டிகை அரசு விடுமுறையாகும். நேற்றும் முன்தினமும் சனி மற்றும் ஞாயிறு என விடுமுறை தினமாக இருந்தது. இருப்பினும், மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில்வரி மற்றும் நிறுவன வரி ஆகியவற்றை பொதுமக்கள் செலுத்துவதற்காகவும், தொழில் உரிமங்களை புதுப்பித்து கொள்ளவும் வழிவகை செய்யும் வகையிலும் மாநகராட்சியின் வருவாய்த்துறை மார்ச் 29, மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய விடுமுறை நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், சென்னையில் சொத்து வரி மூலமான வருவாயை அதிகரிக்க மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாகச் சொத்துவரி கட்டாமல் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்கள் பெயர்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
எப்படிச் செலுத்தலாம்
கடந்த ஒரு மாதமாகவே சொத்து வரி செலுத்துவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடத்தப்பட்டன. சொத்து வரி செலுத்தவில்லை என்றால் மாதம் ஒரு சதவீதம் (தனிவட்டி அடிப்படையில்) அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வரி பாக்கியை மாநகராட்சி அலுவலகங்கள், இ சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகச் சொத்துவரி செலுத்தாதவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து ஜப்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் இன்று கடைசி நாளில் மறக்காமல் சொத்து வரியைச் செலுத்திவிடுங்கள்.












Click it and Unblock the Notifications