விடாத ஸ்டாலின்! 5 பக்கத்திலிருந்து அம்பு.. சிக்கியது எல்லாம் டாப் "தலைகள்".. அதிர்ந்து நிற்கும் பாஜக
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 1 வாரத்தில் பாஜகவினர் பல சம்பவங்களில் கைதாகி உள்ளனர். போலீசை தாக்குவது, வன்முறையை தூண்டுவது, பொய்யான செய்தியை பரப்புவது என்று பல்வேறு காரணங்களுக்காக பாஜகவினர் அடுத்தடுத்து கைதாகி உள்ளனர்.
பாஜக தரப்பை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திமுக எம்பி ஆ. ராசாவின் பேச்சில் இருந்துதான் இந்த சம்பவங்கள் நடக்க தொடங்கின.
சமீபத்தில் திமுக எம்பி ஆ. ராசா பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான்.உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
ஆ.ராசா கால் வைக்கட்டும்.. விடமாட்டேன்..கொதித்த உத்தம ராமசாமி.. நீடித்த போராட்டம்..தொடரும் கைது
என்ன சொன்னார்?
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன்.. இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். பாஜகவினர் ஆ. ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சில இடங்களில் போராட்டங்களையும் நடத்தினர்.
போராட்டம்
ஆனால் போராட்டம் என்ற அளவோடு இல்லாமல்.. பாஜகவினர் சிலர் போலீசை தாக்குவதும், வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதும் என்று சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன்படி சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் திமுகவிற்கு எதிராக பாஜகவினர் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி உள்ளனர். ஆ. ராசாவை கண்டிக்கும் விதமாக போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த நிலையில் இடத்தில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதால், பாஜகவினருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் மோதல் வந்துள்ளது. இதை பற்றி விசாரிக்க சென்ற போலீசாரை கள்ளக்குறிச்சி பாஜக நகர தலைவர் சத்யா பீர் பாட்டிலால் தாக்கி உள்ளார்.
கைது
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரை தாக்க முயன்ற சத்யா தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.இதேபோல் தூத்துக்குடியில் ஆ. ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தது இரவோடு இரவாக இந்து முன்னணியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். ஆனால் இவர்கள் அனுமதி வாங்காமல் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து போஸ்டர்களை வாங்கிய கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் அதை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இதை தட்டிக்கேட்ட பாஜக நகர தலைவர் சீனிவாசன் காவல் நிலைய அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
அடுத்த கைது
ஏன் போஸ்டரை பிடிங்கினாய் என்று கூறி காவல் நிலைய அதிகாரிகளை பாஜக நகர தலைவர் சீனிவாசன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜக சீனிவாசனும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் நேற்று பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பாக கோவை பீளமேட்டில் ஆ. ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜகவினர் பலரும் கலந்து கொண்டனர். பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பாலாஜி உத்தம ராமசாமி
இதில் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, ஆ. ராசாவை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு அவரை ஒருமையில் திட்டி பேசினார். முதல்வரையும் ஒருமையில் பேசினார். இது போக அத்துமீறும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பாலாஜி உத்தம ராமசாமி பேசினார். அவரின் பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இது போக சமீபத்தில், இது போக கோவில்பட்டியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியிலும் பாஜகவினர் அத்துமீறி உள்ளனர். அந்த கபடி போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்
கூட்டத்தை கட்டுப்படுத்த அவ்வப்போது கண்டிப்புடன் பேசி உள்ளார்.
பாஜக தலைவர் சீனிவாசன்
இதை தட்டிக்கேட்ட பாஜக நிர்வாகி, அங்கேயே போலீசாரின் சட்டையை கிழித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் கோவில்பட்டி நகர பாஜக தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தாய்ப்பாக முதல்வர் ஸ்டாலின் குறித்து போலி செய்தி ஒன்றை போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார். ஒரு பத்திரிக்கை நிறுவனத்தின் பெயரில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக போலி அட்டைப்படத்தை உருவாக்கி, அதை பாஜகவினர் போஸ்டராக ஒட்டி உள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 11ம் தேதி இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது
இந்த போஸ்டர்களை திமுகவினர் ஆங்காங்கே கிழித்து எறிந்தனர். இந்த நிலையில் திமுக சார்பாக இதற்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது. துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் இதற்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி ஒரே வாரத்தில் 5 சம்பவங்களில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த தொடர் கைதுகள் பாஜக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.