'ஆபாச அர்ச்சனை' பஞ்சாயத்து ஓவர்! அக்காடா- தம்பிடா! கூட்டாக பேட்டி தந்த பாஜக டெய்சி- திருச்சி சூர்யா!
சென்னை: பாஜகவின் தமிழக நிர்வாகிகளான டெய்சி, திருச்சி சூர்யா இடையேயான ஆபாச பேச்சு குறித்த கட்சி ரீதியான அதிகாரப்பூர்வ விசாரணை முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அக்கா, தம்பியாக இணைந்து செயல்படுவோம் என அறிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா... திமுக ராஜ்யசபா எம்.பி.யும் மூத்த தலைவருமான திருச்சி சிவாவின் மகன். தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் திமுகவை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு ஓபிசி பிரிவு தலைவராகவும் திருச்சு சூர்யா நியமிக்கப்பட்டார்.
பாஜகவில் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரண். இவர் இயற்கை மருத்துவர் எனவும் மருத்துவர் என பொய்யாக காட்டிக் கொள்கிறார் எனவும் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.
திருச்சி சூர்யா, டெய்சி சரண் இருவரிடையேயான தொலைபேசி உரையாடல் தமிழக அரசியல் களத்தில் அனலைக் கிளப்பிவிட்டது. தமிழக பாஜகவில் பெரும் புயலையும் உருவாக்கிவிட்டது. அந்த தொலைபேசி உரையாடலில், அச்சில் ஏற்ற முடியாத அத்தனை ஆபாச சொற்களையும் பயன்படுத்தி டெய்சியை கேவலமாக பேசி இருந்தார் திருச்சி சூர்யா.
வெட்டி மெரினாவில் வீசுவேன்.. அலறவிட்ட ஆடியோ விவகாரம்.. சூர்யா சிவா- டெய்சியிடம் பாஜக விசாரணை
காயத்ரி ரகுராம் பலியாடு
இந்த ஆடியோ பதிவு வெளியான நிலையில் திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக நிர்வாகியாக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் வலியுறுத்தினார் ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார். திருச்சி சூர்யா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தால் பாஜக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
திருப்பூரில் விசாரணை
இதனிடையே இந்த அக்கப்போர் தொடர்பாக திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் கனக சபாபதி மற்றும் மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் இந்த விசாரணையை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை தமிழக பாஜக மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக்கா, தம்பியாக இருப்போம்
திருப்பூரில் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த பின்னர் டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது டெய்சி சரண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவின் சித்தார்த்தங்களால் ஈர்க்கப்பட்டு பாஜக கட்சியில் இருவரும் சேர்ந்தோம். கண் பட்ட நிகழ்வு போல ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டது. திருச்சி சூர்யா சிவா எனக்கு தம்பி போன்றவர். அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்ம் வகையில் நடந்து விட்டது. மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி கட்சியின் மூத்த தலைவர்கள் கனகசபாபதி மற்றும் மலர்க்கொடி முன்னிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளோம். இருவரும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளோம். இவ்வாறு டெய்சி சரண் கூறினார்.
மன்னிப்பு, குடும்ப ரீதியாக நட்பு தொடரும் - திருச்சி சூர்யா
இதனைத் தொடர்ந்து திருச்சி சூர்யா சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் பேசியது தவறு தான். இதற்காக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பு எழுத்துப்பூர்வமாக என்னுடைய விளக்கத்தை அளித்திருக்கிறேன். என் பேச்சுக்காக கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். செல்போனில் பேசிய தங்கள் இருவரிடமிருந்தும் இந்த ஆடியோ வெளியே செல்லவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டிருக்கிறது. பாஜக மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கவே இது தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிற்து. திமுகவில் சைதை சாதிக் மீது காவல்துறையில் புகார் அளித்தும் கூட கட்சி சார்ந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் பாஜகவோ நடவடிக்கை எடுத்ததோடு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. இப்பிரச்சனையை இதோடு இருவரும் பரஸ்பரம் முடித்துக் கொண்டுவிட்டோம். இருவரது நட்பும் குடும்ப ரீதியாக தொடரும். இவ்வாறு திருச்சி சூர்யா கூறினார்.