மொத்தம் 24 நாள்.. தேனியில் இருந்து காய்நகர்த்தும் டிடிவி தினகரன்.. அமமுக நிர்வாகிகளுக்கு ஓலை.. ஏன்?
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் பணியையொட்டி அனைத்து கட்சிகளும் பணிகளை துவங்கி உள்ளன. இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரிய திட்டத்தை தீட்டி கட்சி நிர்வாகிகளுக்கு ஓலை அனுப்பி தயாராக இருக்கும்படி கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு டிடிவி தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை துவக்க செயல்பட்டு வருகிறார். அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் செயல்பட்டு வருகிறார்.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிற மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை துவங்கி உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி
இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் கூறும் கருத்துகளும் பேசும் பொருளாகி மாறி வருகின்றன. அந்த வகையில் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், அதிமுக கூட்டணியில் இணைய விரும்பவில்லை என டிடிவி தினகரன் கூறியதோடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி 2023 இறுதியில் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிளம்பிய யூகம்
மேலும் தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இருப்பினும் இந்த கூட்டணியை தொடர எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் தான் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெல்லும் என கூறினார். மேலும் பல தலைவர்கள் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என கூறினர். இதனால் பாஜக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பான யூகங்கள் தற்போது கிளம்பி உள்ளன.

அமமுக முக்கிய திட்டம்
இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பெரிய திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமைகழக அலுவலகத்தில் டிசம்பர் 28ம் தேதி காலை 9 மணியளவில் தொடங்கி மொத்தம் 24 நாட்கள் மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது.

பிப்ரவரி இறுதி வரை
இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை ஏற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். கூட்டத்தில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்தின் தலைமை நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என அமமுக சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்து ஆலோசனை?
இந்த ஆலோசனை கூட்டம் பிப்ரவரி மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும், மாவட்ட வாரியாக கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள், பூத் கமிட்டி, புதிய நிர்வாகிகள் சேர்ப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றியும் டிடிவி தினகரன் ஆலோசனை வழங்கலாம் என கூறப்படுகிறது.

தேனியில் இருந்து துவக்கம்
அதன்படி டிசம்பர் 28 ல் முதற்கட்டமாக தேனி, சிவகங்கை மாவட்டத்தினருடன் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். டிசம்பர் 29ல் மதுரை, ஜனவரி 6ல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஜனவரி 8ல் விருதுநகர், திருநெல்வேலி, ஜனவரி 10ல் தென்காசி, தூத்துக்குடி, ஜனவரி 21ல் தஞ்சாவூர், ஜனவரி 27ல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், ஜனவரி 30ல் பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சென்னை நிர்வாகிகள்
அதன்பிறகு பிப்ரவரி 4ல் திருச்சி, பிப்ரவரி 7ல் கடலூர், 12ல் கோவை, 15ல் சேலம், 19ல் சென்னை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது. மார்ச் 1ல் ராணிப்பேட்டை, வேலூர், 4ல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 6ல் ஈரோடு, 7ல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், 10ல் நாமக்கல், நீலகிரி, 12ல் திண்டுக்கல், 14ல் திருப்பத்தூர், திருவண்ணாமலை, 17ல் திருப்பூர், 19ல் திருவள்ளூர், 21ல் கிருஷ்ணகிரி, தருமபுரி, 23ல் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications