விஜய் என்ன மன்னரா? “மாதம் ஒருமுறை வருவேன்.. நீங்களும் என்னை பார்க்கலாம்” வாக்குறுதியால் விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் எனக்கு எப்போதுமே கூடுதல் ஸ்பெஷல். எனது தொகுதிக்கு மாதம் ஒரு முறை வருவேன்.. நீங்களும் என்னை சந்திக்கலாம்" எனக் கூறியுள்ளார் தவெக தலைவர் விஜய். விஜய்யின் இந்தப் பேச்சு விமர்சனங்களை கிளப்பிவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக அரசியல் களத்துக்கு வந்திருக்கும் தவெக தலைவர் விஜய்யும் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

TVK Leader Vijay s Monthly Visit Promise Sparks Political Backlash

தவெக தேர்தல் அறிக்கை

இந்நிலையில், சென்னையில் இன்று தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜய். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் 'மக்களின் தேர்தல் அறிக்கை' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விவசாயி நாராயணன் என்பவரிடம் வழங்கினார். தொடர்ந்து ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, திருநங்கை ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை பிரதிகளை வழங்கினார்.

மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், ஏழை பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் & பட்டுச்சேலை, 1 முதல் 12 வகுப்பு வரை இடைநிற்றலை தவிர்க்க பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன், 100 காமராஜர் தரம் கொண்ட பள்ளிகள், அனைத்து மாவட்டங்களிலும் தரமான கல்வியை வழங்கும் இலவச உறைவிடப்பள்ளி, ஒவ்வொரு பள்ளியிலும் நவீன உட்கட்டமைப்பு கல்வி, ஒவ்வொரு தமிழ் மாணவர்களின் கனவுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை ரூ.20 லட்சம் பிணையில்லா கடனுக்கான உத்தரவாதம் ஆகிய வாக்குறுதிகளை அறிவித்தார்.

விஜய் வாக்குறுதி

மேலும், ஏஐ மூலம் இயங்கும் இலவச போட்டி பயிற்சி, போதைப்பொருள் இல்லாத தமிழகம், பள்ளி & கல்லூரிகள் விழிப்புணர்வு மன்றங்கள், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.25 லட்சம் வரையிலான உலகளாவிய இன்சூரன்ஸ் திட்டம், ஒவ்வொரு குடிமகனுக்கு வருடாந்திர உடல் பரிசோதனை, மலிவு விலை மருந்துகள் என பல வாக்குறுதிகளை விஜய் அளித்துள்ளார்.

மாதம் ஒரு முறை

தொடர்ந்து பேசிய விஜய், "நான் ஜெயித்தால் என் தொகுதிக்கு நான் தான் பிரதிநிதி. நாம் உறுதியாக ஆட்சிக்கு வருவோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழ்நாட்டுக்கு நான் என்னவாக இருந்தாலும் என்னோட தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ. தான். என் வீட்டுக்கு நான் பிள்ளை தான். அப்படித்தான் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் எப்பவும் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும்.

மாதம் ஒருமுறை கண்டிப்பாக என்னுடைய தொகுதிக்கு நான் வருவேன். அதுமட்டுமல்லாமல் நீங்களும் என்னை சந்திக்கலாம். அது கஷ்டம் கிடையாது. உங்கள் தேவைகளை நான் கேட்காமலேயே செய்து கொடுப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மன்னர் மனப்பான்மையில் பேசும் விஜய்

விஜய்யின் இந்தப் பேச்சுதான் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. தான் எம்.எல்.ஏ ஆகும் தொகுதிக்கு, மாதம் ஒரு முறை வருவேன் எனக் கூறி இருக்கிறார் விஜய். அப்போது நீங்களும் என்னை சந்திக்கலாம் எனக் கூறி இருக்கிறார் விஜய். தான் எம்.எல்.ஏவாக இருக்கும் தொகுதிக்கு மாதம் ஒரு முறை வருவேன் என்பதையே பெரிய விஷயம் என்பது போலவும், மக்கள் தன்னை சந்திக்கலாம் என்பதையே பெரிய தியாகம் செய்வது போலவும் விஜய் பேசி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் கட்சி தொடங்கியது முதலே, உச்சத்தை விட்டு வருகிறேன் என்றும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருகிறேன் என்றும் மன்னர் மனப்பான்மையில் தான் பேசி வருகிறார் விஜய். இப்போதும் அதேபோல, தன் தொகுதி மக்களைப் பார்ப்பது பற்றியே மன்னர் மனப்பான்மையில் பேசி இருக்கிறார்.

விஜய் ஒருவேளை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் அதில் ஒரு தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். பிறகு எப்படி விஜய், 2 தொகுதிகளுக்கும் எம்.எல்.ஏவாகச் செல்ல முடியும்? என்ற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+