இரட்டை இலை எங்களுக்கு மட்டுமே.. "இணையக் கூடாது" இபிஎஸ் எண்ணம் அதுதான்.. அடித்து ஆடும் ஓபிஎஸ்!
சென்னை: இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் எங்களுக்கே வழங்கும் என்றும், தர்ம யுத்தத்தில் இறுதி வெற்றி எங்களுக்கே என்றும் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட இரட்டை தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

தொண்டர்கள் என் பக்கம்
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், அதிமுகவின் தொண்டர்களும், தமிழக மக்களும் அனைத்தையும் அறிந்து புரிந்து வைத்துள்ளார்கள். இந்த நிலை யாரால் ஏற்பட்டது என தொண்டர்களுக்கு தெரியும். தொண்டர்களை இணைக்கிற, ஒருமைப்படுத்துகிற முயற்சியில் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறோம். தொண்டர்களும், பொதுமக்களும் எங்கள் பக்கமே இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல்
தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி கேள்விக்கு, இன்னும் அதற்கான சூழல் உருவாகவில்லை. சூழல் உருவாகும் போது, முறையாக நிலைப்பாட்டை எடுப்போம். அதேபோல் கட்சியின் மாட்சிமை பறிபோகாமல் பாதுகாப்போம் என்று தெரிவித்தார். பின்னர் இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வரவு, செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது தொடர்பான கேள்விக்கு, வரவு செலவு கணக்கு நான் பொருளாளராக இருந்து தாக்கல் செய்தது. அதனை தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

இபிஎஸ் எண்ணம்
தொடர்ந்து இபிஎஸ்-க்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, இணையக் கூடாது என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார். அதேபோல், தமிழகத்தில் அதிமுக தான் மிகப்பெரிய கட்சி. அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். 50 ஆண்டு காலம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பலமான கட்சியாக வளர்த்து கொண்டு வந்துள்ளனர். இன்று தினம் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அதிமுகவை கேவலப்படுத்துகிறார்கள். அதிமுகவை காப்பாற்ற நினைப்பவர்களுடன் இணைந்து செயல்படுவோம். மக்கள் துரோகிகளை துரத்தி அடிப்பார்கள் என்று தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம்
தொடர்ந்து இரட்டை இலை சின்னம் பற்றிய கேள்விக்கு, தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் எங்களுக்கு சின்னத்தை வழங்குவார்கள். இறுதி வெற்றி நிச்சயம் எங்களுக்கு தான். இரட்டை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்க முடியுமா என்ற கேட்டார்கள். இவ்வளவு நிர்வாகிகளை நியமித்து வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி காட்டியுள்ளோம். யார் தலைமையேற்றால் சரியாக இருக்கும் என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

பாஜக - ஓபிஎஸ்
தொடர்ந்து, குஜராத் முதல்வர் பதவியேற்பு விழா பற்றிய கேள்விக்கு, பாஜக சார்பாக எனக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் என்ற வகையில், மரியாதை கொடுத்தார்கள். விழாவின் மையப்பகுதியில் எனக்கு இடம் கொடுக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி, Where is OPS? என்று கேட்டு நலம் விசாரித்தார். பாஜக சார்பில் எங்களுக்கும், எங்கள் தரப்பில் பாஜகவுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications