சென்னைக்கு வரப்போகும் இந்த 2 ரயில்களே போதும்.. வேறு ரயில்கள் இயங்காது.. முதல்வர் கடிதம்
சென்னை: சென்னைக்கு மே மாதம் 14 ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி டெல்லியில் இருந்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து இந்த இரு நாட்களிலும் சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், மற்ற எந்த ஒரு ரயிலும் இப்போதைக்கு இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடனான நேற்றைய வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனையின் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று மே 31ம் தேதி வரை சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்பதுதான்.
கொரோனா.. தென் மாவட்டங்களிலுள்ள சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. கிராமங்களின் நிலை?
கடிதம்
இந்த நிலையில்தான், மத்திய உள்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சருக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை, சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்று மறுபடி வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ராஜ்தானி
அதே நேரம், வரும் 14 மற்றும் 16ம் தேதிகளில் டெல்லியில் இருந்து சென்னைக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதாகவும், அவ்வாறு இயக்கக்கூடிய அந்த ரயிலில் வரக்கூடிய பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு நோய்கள் இல்லாதவர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்றும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிசிஆர் டெஸ்ட்
குறிப்பிட்ட இந்த ரயில் குளிர்சாதன வசதி கொண்டது என்பதால், நோய் பரவல் எளிதாக ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
வேறு ரயில்கள் இயக்கம் இல்லை
தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, வேறு எந்த ஒரு ரயிலையும் மே 31ம் தேதிக்கு முன்பாக இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் தயாராக இல்லை என்பதை முதல்வரின் இந்த கடிதத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அடுத்தகட்ட ரயில்வே இயக்கம் சார்ந்த அறிவிப்பு பின்னர் எதிர்பார்க்கலாம்.