Maanaadu: தடைகளை தாண்டி ரிலீசான மாநாடு! உள்ளே வந்த உதயநிதி ஸ்டாலின்.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
சென்னை: பல்வேறு தடைகளை தாண்டி சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் இன்று காலை 8 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மாநாடு திரைப்படம் இன்று காலை 5 மணிக்கு ஸ்பெஷல் ஷோவாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கும் பிரச்சனை ஏற்பட்டதால் காலை 8 மணி முதல் காட்சிகள் தொடங்கி இருக்கிறது.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி உள்ளது மாநாடு திரைப்படம். தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படத்துடன் மாநாடு வெளியிடப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் அண்ணாத்த திரைப் படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை பெற்றது.
அதன்பிறகும் தீபாவளிக்கு மாநாடு ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறிவந்தார். இது அண்ணாத்த பட தரப்பை எரிச்சலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

மைக்கேல் ராயப்பன்
இந்த நிலையில்தான், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்பட நிதி பிரச்சினையை கிளப்பினார் அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இதனால் மாநாடு படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படத்துடன் மோத முடியாமல் போனது. மாநாடு திரைப்படம் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்கிற்கு செல்வோர் 2 டேஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பண விவகாரம்
பெரிய இடத்துடன் மோதியதன் விளைவு இவ்வாறு கஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று முணுமுணுப்புகள் படக்குழுவினர் மத்தியில் எழுந்தன. இந்த நிலையில்தான் மாநாடு நிகழ்ச்சியில் திடீரென சிலம்பரசன் உடைந்து அழுதுவிட்டார். மைக்கேல் ராயப்பனை மாநாடு பட தயாரிப்பு தரப்பினர் ஏற்கனவே சரிகட்டி விட்ட நிலையில் இந்த படத்துக்கு நிதி உதவி செய்தவர்களில் முக்கியமானவரான உத்தம்சந்த் ரிலீசுக்கு முன்பு ஒப்புக் கொண்டபடி தனக்கு சேர வேண்டிய பணத்தை தர வேண்டும் என்று சுரேஷ் காமாட்சியை வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் படம் பந்தாடப் பட்டதால் நினைத்தபடி வியாபாரம் நடக்க வில்லை. எனவே அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

படம் வெளியாகாது
இந்த நிலையில்தான் நேற்று சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில், திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்று அறிவித்தார் . இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். திரைப்படத்தின் திரையரங்க உரிமை 11 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்யப்படாவிட்டால் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருந்தன.

நிதி உதவி
மாநாடு பட தயாரிப்பு குழுவுக்கு பைனான்சியர் மதுரை அன்பு செழியன் 10 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். மேலும் மாநாடு திரைப்படத்தை கலைஞர் டிவிக்கு கேட்டுப் பெற்று அதற்கு பதிலாக ஆறு கோடி ரூபாய் பணத்தை உதயநிதி ஸ்டாலின் தலையீட்டின் பேரில் வழங்கியிருக்கிறார்கள். சிலம்பரசன் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார். சிலம்பரசன் தாய், உஷா ராஜேந்தர் சுமார் 3 கோடி ரூபாயை ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து கடன்களும் செட்டில் செய்யப்பட்டு தான் படம் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

உதவி செய்தாரா உதயநிதி ஸ்டாலின்
கலைஞர் டிவி இந்த படத்தை வாங்கியதன் மூலம் 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதை உதயநிதி ஸ்டாலின் செய்த உதவி என்று திமுக ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள் . அதேநேரம் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் செயல் என்றும், தங்களது தொலைக்காட்சி சேனலுக்கு படம் வாங்கியதை உதவி என்று கூறமுடியாது, நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று வேண்டுமானால் கூறலாம் என்றும் ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இருதரப்பும் கூறிவரும் நிலையில் நடந்தது என்ன, யார் யாரெல்லாம் உதவினார்கள் , யார் யார் தொந்தரவு செய்தார்கள் என்ற விபரத்தை சிலம்பரசன் அல்லது தயாரிப்பு தரப்பு வெளியிட்டால்தான் இந்த சர்ச்சை ஓயும். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications