அமைச்சரவையில் உதயநிதி? எல்லா தகுதியும் இருக்கு.. கட்சியில் புது எழுச்சி.. மா.சுப்பிரமணியன் உற்சாகம்!
சென்னை : அடுத்த பிறந்தநாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக கொண்டாட வேண்டும். அது நடந்தால் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உதயநிதி அமைச்சராவதற்கான எல்லா தகுதிகளையும் உடையவர், அவர் இளைஞரணிக்குப் பொறுப்பேற்றது முதல், இளைஞர்களிடம் ஒரு பெரிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு அதிகாலை முதலே பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
திமுக நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
" />என் அன்புத் தம்பி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து.. உருகிய கமல்ஹாசன்!
சைதாப்பேட்டையில் மருத்துவ முகாம்
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "உதயநிதியின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் அமர்க்களம் ஆரவாரம் இல்லாமல் ஏழை மக்கள் பயன்படுகிற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த பிறந்தநாளில் அமைச்சர்
தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தனது அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். அது நடந்தால் நல்லது, அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளையும் உடையவர் உதயநிதி.
சாரை சாரையாக
திமுகவுக்கு 19, 20 துணை அமைப்புகள் இருந்தபோதும், திமுக இளைஞரணி மிகப்பெரிய அளவில் 30 லட்சம் இளைஞர்களைக் கொண்டு உயிரோட்டத்துடன் உள்ளது. இந்த பொறுப்பை இரண்டாவது முறையாக ஏற்று உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பொறுப்பேற்றது முதல், இளைஞர்களிடம் ஒரு பெரிய உத்வேகம், புதிய எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது. அதனால், திமுகவில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர்.
கட்சியின் அடித்தளம்
திமுக இளைஞரணி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடித்தளம். திமுக இளைஞரணி சம்பிரதாயத்திற்கான அமைப்பு அல்ல, சமூகத்திற்கான அமைப்பு. 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 30 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கி இருக்கிற உயிரோட்டமான அமைப்பு இது. நல்ல தலைவராக உதயநிதி இருப்பதால் அவர் அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளுக்கும் ஏற்புடையவர்" எனத் தெரிவித்தார்.
முடிவை நோக்கி கொரோனா
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சர்வதேச விமானங்களில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த வாரம் அனைத்து விமானங்களிலும் குறிப்பாக இந்திய விமானங்களில் பயணிக்கிற பயனாளிகளுக்கு முக கவசம் கட்டாயம் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். கட்டாய கொரோனா பரிசோதனை யில் இருந்தும் விலக்கு கிடைக்கும். சீனாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட மற்ற நாடுகளில் கொரோனா முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.