ஆமா.. ஆர்எஸ்எஸ் சுதந்திரமாக செயல்படுகிறதே.. பிஎஃப்ஐக்கு மட்டும் ஏன் தடை.. வன்னியரசு பரபரப்பு கேள்வி
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுதந்திரமாக செயல்படும்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு விதித்து இருக்கும் தடை ஜனநாயகத்துக்கு எதிரான என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வந்தது. தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தது.
அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை-சட்டவிரோத இயக்கமாக அறிவித்தது மத்திய அரசு
என்.ஐ.ஏ சோதனை
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.
தடை உத்தரவு
நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.
8 அமைப்புகளுக்கு தடை
இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வன்னியரசு கண்டனம்
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை செய்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பி.எஃப்.ஐ என அழைக்கப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு தடை விதித்திருப்பதாக பாஜக அரசு அறிவித்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். வன்மையாக கண்டனத்துக்குரியது.
ஜனநாயகத்துக்கு ஆபத்து
பாதிக்கப்பட்ட மக்கள் குரலாய் களமாடும் பி.எஃப்.ஐ தடையை நீக்க அத்தனை சனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும். பி.எஃப்.ஐ மீதான தடையை உடைப்பது சனநாயக சக்திகளின் கடமை. ஆர்.எஸ்.எஸ். சுதந்திரமாக செயல்படும் போது மக்கள் அமைப்பான பி.எஃப்.ஐ தடை செய்வது சனநாயகத்துக்கு ஆபத்து." என்று அவர் பதிவிட்டுள்ளார்.