ஜெயந்தியும் உள்ளே சேர்க்கலை.. மகனும் இல்லை..வேலையும் இல்லை.. நடுரோட்டிலேயே வேல்முருகன் செய்த பகீர்
சென்னையில் தொழிலாளி ஒருவர் நடுரோட்டிலேயே தீக்குளித்து இறந்துவிட்டார்
சென்னை: வேலை பிரச்சனை, குடும்ப பிரச்சனையை தாங்க முடியாமல் ஒருவர் நடுரோட்டிலேயே தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம், பால விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன்.. 46 வயதாகிறது.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.. மனைவி பெயர் ஜெயந்தி.. அவருக்கு 40 வயதாகிறது.
இவர்களது மூத்த மகன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டாராம். அப்போதிருந்தே மகன் நினைவாகவே விரக்தியில் வேல்முருகன் இருந்து வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், வீட்டிலிருந்தும் வெளியேறி தனியாக வசித்து வந்தார்.

வேல்முருகன்
இதனிடையே கொரோனா இரண்டாவது பரவல், அதையொட்டி லாக்டவுன் போட்டுவிடவும், வேலையின்றி வேல்முருகன் அவதிப்பட்டுள்ளார்.. இந்த நிலையில், மனம் வெறுத்து போயிருந்த வேல்முருகன் 3 வருஷத்துக்கு பிறகு தன்னுடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.. அப்போது மனைவி ஜெயந்தியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.. இதனால், ஜெயந்தி அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது..

பெட்ரோல்
இதனால் மேலும் மனமுடைந்த வேல்முருகன், அங்கிருந்து விநாயகபுரம், செம்பியம் - செங்குன்றம் நெடுஞ்சாலைக்கு சென்றார். அங்கே ஒரு கல்யாண மண்டபம் முன்பு நின்று கொண்டு, கையில் பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது கடகடவென ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார்.. இதனால் உடம்பெல்லாம் தீ பற்றி கொண்டு எரிந்தது..

பரபரப்பு
வலி தாங்க முடியாமல் வேல்முருகன் நடுரோட்டிலேயே இப்படியும் அப்படியும் அலறி கொண்டே ஓடினார்.. இதனால் அந்த இடமே பரபரப்பாகிவிட்டது.. இதை பார்த்து பொதுமக்கள் உடனடியாக புழல் போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து வேல்முருகனை மீட்டு இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்..

விசாரணை
ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போதே வேல்முருகனுனுக்கு உடம்பெல்லாம் 85 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் வேல்முருகனை காப்பாற்றமுடியவில்லை.. சிகிச்சை பலனின்றி நேற்று வேல்முருகன் உயிரிழந்தார். இது தற்கொலை குறித்து, புழல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்..!












Click it and Unblock the Notifications