18 வயதுக்கு மேல் அனைவருக்கும் நாளை முதல் தடுப்பூசி.. தொழிலாளர்களுக்கு முன்னுரிமை: மா.சுப்பிரமணியம்
நாளைமுதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது
சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..!
தமிழகம் முழுவதும் தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.. கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதை தடுக்க முடியவில்லை.. எனவே, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளிலும் இறங்கி உள்ளது.
தற்போது முழுமையான லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில், இந்த லாக்டவுன் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:
ராமன்
"கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை... நேற்று காலை சுகாதாரத்துறைக்கு ஒரு புகார் மனு வந்தது.. அந்த மனுவில், திண்டிவனத்தில் டாக்டர் ராமன் என்பவர் தொற்று பாதித்து இறந்து விட்டதாகவும், அவருக்கு போலியான ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டதாகவும் அவருடைய சகோதரர் தெரிவித்திருந்தார்...
உயிரிழப்பு
அந்த டாக்டரின் உயிரிழப்புக்கு காரணமான மருந்து ஒன்றையும் கொண்டு வந்து எங்களிடம் தந்தார்.. நானும், செயலாளரும், அந்த மருந்தை மருத்துவ நிபுணர்களிடம் காட்டியபோது அது போலியான மருந்து என்பதும், ஐமேடு என்கிற தனியார் அந்த மருந்தை தந்துள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் இருந்த அலுவலர்கள் திண்டிவனத்துக்கு விரைந்து சென்று, அந்த ஆஸ்பத்திரிக்கு சுகாதார சட்டம் விதி 76-ன் படி ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
சென்னை
இப்போதைக்கு 8 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது... கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முறையில், சென்னையை போல மற்ற மாவட்டங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதேபோல் ஊரடங்கை இன்னும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. எனவே, ஊரடங்கு முடிவதற்குள் தொற்று எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுன்
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது போக போகத்தான் தெரியும். ஊரடங்குக்கு முன்னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது... ஆனால், லாக்டவுனுக்கு பிறகு, தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரம் என்ற அளவிலேயே தொடர்கிறது...அதேபோல, சென்னையிலும் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது... சென்னையை பொறுத்தவரை, ஆக்சிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகள், சித்த மருத்துவத்திலும் படுக்கைகள் காலியாக உள்ளன.
உத்தரவு
ஊரடங்கு கடுமையாகத்தான் இருக்கும். இது ஒரு கசப்பு மருந்து தான். வேறு வழியில்லை.. எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்... உலகளாவிய டெண்டர் மூலம் 3.50 கோடி டோஸ் தடுப்பூசி கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் முடிவதற்குள் ஆர்டர் செய்த தடுப்பூசிகள் கிடைத்துவிடும். தமிழகத்தில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
தொற்று
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை 78 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது... அதில் 69 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.. மீதமுள்ள தடுப்பூசிகள் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகம்
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. அந்தவகையில் நாளை அதாவது வியாழக்கிழமை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார்... அதிலும் குறிப்பாக, ஆட்டோ டிரைவர், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்" என்றார்.