ஐநா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்பட வைகோ, வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் போர்க்குற்றவாளியான இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், ஐநா மனித உரிமைப் பேரவையில் இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு சர்வதேச குற்ற இயல் மன்றத்தில் விசாரணை நடத்தவும், இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் தமிழ் ஈழம் குறித்துப் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தரவும், சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யவும், ஈழத்தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பகுதிகளைத் திரும்ப ஈழத்தமிழர்களுக்கே கொடுக்கவும், தமிழர் பகுதிகளில் உள்ள இலங்கை இராணுவத்தை திரும்பப் பெறவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவரவும் வேண்டுகோள் விடுத்து நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியிருக்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் நடப்பு ஆண்டுக்கான 51வது அமர்வு கடந்த 12 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6ஆம் தேதி வரை நடக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாத அரசின், 2009இல் நடந்த மனித உரிமைகள், வன்முறைகள், ஈழத்தமிழர்களுக்கு எதிரான ராணுவ குற்றங்கள், ராணுவ அத்துமீறல் குறித்து பேசி வரும் ஐக்கிய நாடுகள் சபை, தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டியலில் நரிக்குறவர்! தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும்! வேல்முருகன் ஆட்சேபனை!
ஐநா புகார்
இந்த பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்து வரும் படைச்செலவு என்றும் பௌத்த பேரினவாத அரசு மொத்த வரவு செலவு திட்டத்தில் 15 விழுக்காட்டை படைச்செலவுக்கு செய்து கொண்டிருப்பதையும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. பௌத்த பேரினவாத அரசின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், மனித உரிமை மீறப்பட்டுள்ளது; இது ஊழலுக்கும் அதிகார அத்துமீறல்களுக்குமான சூழலை உருவாக்கியுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
ஐநா மனித உரிமைகள் சபையில் தீர்மானம்
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளதால், அத்தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கடுமையாக எதிர்த்துள்ளார். தொடர்ந்து, போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுகுறித்து ஏன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றும அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யூத இனவழிப்பு நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், நாஜிப் படைகளில் யாரெனும் ஓர் அதிகாரி உயிருடன் இருப்பது தெரிய வந்தால், அவரை புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்ற நடைமுறை இன்று வரை இருந்து வருகிறது.
தேவை பொதுவாக்கெடுப்பு
இதனால், ஈழத்தமிழர்கள் படுகொலை முடிந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கருத்தை ஏற்க முடியாது. இக்கருத்தை இந்திய ஒன்றிய அரசும் ஏற்க கூடாது. கடந்த 2021 மார்ச்-இல் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை ஆதரிக்க மறுத்து, வாக்கெடுப்பில் இருந்து இந்திய ஒன்றிய அரசு விலகி நின்றது. இம்முறையும், ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இரண்டகமாகவும் இந்திய ஒன்றிய அரசு செயல்பட போகிறதா என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்றுநோக்கி வருகின்றனர். எனவே, இந்திய ஒன்றிய அரசு இனியும் காலம் தாழ்த்தாது, ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கும், தமிழ்நாட்டு தமிழர்களின் நிலைபாட்டிற்கும் மதிப்பளித்து, அரசியல் தீர்வு காண பொது வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபைவில் வலியுறுத்த வேண்டும்.
தமிழக அமைச்சரவையில் தீர்மானம்
சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வு கோரும் தீர்மானத்தை, நடந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் இந்திய ஒன்றிய அரசு முன்மொழிய வேண்டும். தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சான்றுகள் திரட்டி வரும் மனித உரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்தின் பணிக்கு இந்திய ஒன்றிய அரசு நிதியுதவி செய்ய வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வுக்கு வழிசெய்யும் தீர்மானத்தை கொண்டு வர, இந்திய ஒன்றிய அரசையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு அரசுகளையும் வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கடிதம் எழுதுவதோடு, அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு இறையாண்மையை உறுதிப்படுத்துவதே தேவை. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.