ஆறடி மனிதனுக்குப் பள்ளம் பறிக்கும்...யாகாவா ராயினும் நாகாக்க - வைரமுத்துவின் நெற்றித்தீ
மனிதர்களுக்கு நாக்கு எந்த அளவிற்கு தீங்கு செய்கிறது என தனது நெற்றித் தீ தொடரில் எழுதியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
சென்னை: நான்கு அங்குலம் இருந்துகொண்டு ஆறடி மனிதனுக்குப் பள்ளம் பறிப்பது நாக்கு என்று கவிப்பேரரசர் வைரமுத்து தனது நெற்றித்தீ எனும் கவிதைத் தொடரில் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து நெற்றித்தீ என்ற தனது கவிதைத் தொடரில் தினம் ஒரு கருத்துக்களை குறிப்பிட்டு வருகிறார். சில தினங்களுக்கு எழுதியிருந்த இரை பற்றிய கவிதையில்

எந்தப் பறவையின்
இரையையும்
கூட்டுக்குள் யாரும்
எறிவதில்லை - அது
காட்டுக்குள்
இருக்கிறது
இரையைப் படைத்தது
இயற்கையின்
சாமர்த்தியம் - அதை
இரைப்பைக்குக் கடத்துவது
நமது சாகசம்
என்று மனிதர்கள் தமக்கு தேவையான உணவை எப்படி தேடி சேர்ப்பது என்று எழுதியிருந்தார். இன்றைய தினம் நாக்கை நாம் காக்கா விட்டால் அது எந்த அளவிற்கு தீங்கு தரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பக்கத்தில் இருந்துகொண்டே
பல்லை உடைப்பதும்
நான்கு அங்குலம் இருந்துகொண்டு
ஆறடி மனிதனுக்குப்
பள்ளம் பறிப்பதும்
மற்றவரை அடிப்பதாய்க்
கருதிக்கொண்டு
நமக்கே சாட்டை ஆவதும்
நீரில் நனைந்துகொண்டே
நெருப்பு மூட்டுவதும்
நாக்கு தான்
"யாகாவா ராயினும் நாகாக்க"
என்று திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார் கவிப்பேரரசர் வைரமுத்து. நாக்கை காக்கா விட்டால் அது ஆறடி மனிதருக்கு பள்ளம் பறித்து விடும் என்றும் நீரில் நனைந்து கொண்டே நெருப்பை மூட்டிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications