''முதலமைச்சர் ஸ்டாலின் மனதில் இந்து மத வெறுப்பு''.. அதனால் தான் அவர்..? பரபரப்பை கிளப்பும் வானதி!
சென்னை: இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல முடியாத அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மனதில் இந்து மதத்தின் மீது வெறுப்பு உள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பாஜகவை பார்த்து ஸ்டாலின் வகுப்புவாத கட்சி என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

இந்து மத பண்டிகைகள்: ''நாத்திகம், பகுத்தறிவு, சுயமரியாதை, மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தின் மீது மட்டும் வெறுப்பு பிரசாரம் செய்து வரும் கட்சி திமுக. அனைவருக்கும் பொதுவான முதலமைச்சராக இருந்தும், இந்து மத பண்டிகைகளுக்குகூட வாழ்த்து சொல்ல முடியாத அளவுக்கு மனதில் இந்து மதத்தின் மீது வெறுப்பை வைத்திருக்கும் ஸ்டாலின், பாஜகவை பார்த்து வகுப்புவாதம் என்கிறார். வேடிக்கையாக இருக்கிறது.''
சி.ஏ.ஜி. அறிக்கை: ''பிரதமர் மோடி ஆட்சியில் முறைகேடுகளை சி.ஏ.ஜி., அம்பலப்படுத்தி விட்டது என இப்போது மைக் கிடைக்கும் போதெல்லாம் அவதூறு பரப்பி வருகிறார். மத்திய அரசு திட்டங்களுக்கு, தொடக்கத்தில் ஒதுக்கப்பட்டதைவிட அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது என்பதைதான் சி.ஏ.ஜி., அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. திட்டங்கள் தொடக்கத்தில் திட்டமிட்டதைவிட, பல்வேறு மாறுதல் செய்யப்பட்டதால் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.''
மேடைகளில் அவதூறு: ''இது ஊழல் அல்ல என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல், பொது மேடைகளில் அவதூறு பரப்பி வருகிறார். ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஏனெனில் திமுகவில்தான் வழக்கறிஞர் அணியை பலமாக வைத்திருக்கிறார்கள். பல வழக்கறிஞர்களுக்கு எம்பி பதவி கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான், அவரே பொய்யை பரப்பி வருகிறார்.''
மக்கள் தக்க பதிலடி: ''முதல்வர் குடும்பத்தின் ஊழல்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அதனாலேயே அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசினார்கள். ஏனெனில் யார் ஊழல்வாதிகள் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பொய்கள் பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.''












Click it and Unblock the Notifications