அர்ஜுன் சம்பத் மீது காலணி வீச்சு.. வன்னியரசு உள்பட 40 விசிகவினர் கைதாகி விடுதலை
சென்னை: சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்த வந்த போது அவர் மீது விசிகவினர் காலணி வீசியதால் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர்.
அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் விபூதி பூசியும் குங்குமமிட்டும் காவி உடை அணிந்தபடியுமான அம்பேத்கரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் அந்த போஸ்டரில் காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்தன.
அம்பேத்கர் சிலைக்கு விபூதி பூச மாட்டேன்! நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த அர்ஜுன் சம்பத்!
அம்பேத்கர் மணிமண்டபம்
சென்னை அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்களான வன்னியரசு, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
அர்ஜுன் சம்பத் மீது காலணி வீச்சு
இதை தொடர்ந்து விசிகவினர் அர்ஜுன் சம்பத் மீது காலணிகளை வீசியும், அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. அதன் வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன. மேலும் தண்ணீர் பாட்டில்களை வீசி தகராறு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து வன்னியரசு உள்பட 40-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
அவர்கள் மயிலாப்பூர் காவல் எல்லைக்குள்பட்ட நாகேஸ்வரராவ் பூங்காவில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் இரவு 8.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். மேலும் 20 பேரின் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக அம்பேத்கர் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன். விபூதி குங்குமம் பூச மாட்டேன் என அர்ஜுன் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்திருந்தார்.
அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த செல்லும் போது பாதுகாப்பு வழங்க பட்டினம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி அர்ஜுன் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போது இந்த உத்தரவாத கடிதத்தை அளித்தார். இதை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டது.