டாக்டர் திருமாவளவன்.. 16 ஆண்டுகால ஆய்வும், உழைப்பும்.. நெகிழும் வி.சி.கவினர்!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பி.ஹெச்.டி.முடித்து நேற்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் திருமாவளவனுக்கு பட்டம் வழங்கினார்.
மீனாட்சிபுரம் மதமாற்றம் நிகழ்வால் ஏற்பட்ட கலவரத்தை அடிப்படையாகவும், மையக்கருவாகவும் வைத்து "பாதிக்கப்பட்டவர் பார்வையில்'' என்ற தலைப்பில் அவர் 16 ஆண்டுக்காலம் ஆராய்ச்சி நடத்தி, பல்வேறு கட்டுரைகளை சமர்பித்து டாக்டர் ஆகியுள்ளார்.

கூறியது யார்?
திருமாவளவன் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் எம்.எ.கிரிமானலஜி படித்த போது அவருக்கு பாடம் எடுத்த சொக்கலிங்கம் என்ற பேராசிரியர் 2000மாவது ஆண்டு காலக்கட்டத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துனைவேந்தராக பதவியேற்கிறார். அப்போது அவரை சந்தித்து வாழ்த்துக்கூறச் சென்ற திருமாவளவனிடம், நீங்கள் ஏன் பி.ஹெச்.டி. செய்யக்கூடாது என கேட்கிறார் சொக்கலிங்கம்.

சாத்தியமே
அரசியல் கட்சி நடத்திக்கொண்டு ஆய்வு செய்வதெல்லாம் சாத்தியமா என திருமா யோசித்துள்ளார். மேலும், நேரம் கிடைக்காது என்பதையும் கூறியுள்ளார். ஆனால், விடுவதாக இல்லை சொக்கலிங்கம். எத்தனை கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றாலும், ஆய்வுசெய்து பெறும் முனைவர் பட்டத்துக்கு ஈடில்லை எனக் கூறி திருமாவை பி.ஹெச்.டி.க்கு விண்ணப்பிக்க வைத்துவிட்டார்.

16 ஆண்டு கால ஆய்வு
அதற்கு பிறகு 2002-ல் தொடங்கி ஏறத்தாழ 16 ஆண்டுகள் அரசியல் ஓட்டத்துக்கு மத்தியில் ஆய்வுக்கும் நேரம் ஒதுக்கி கடந்த 2018-ல் தீஸிசை சமர்ப்பித்து (Viva)வைவா எனப்படும் பொதுவாய்மொழித் தேர்வையும் எதிர்கொண்டார். அப்போது அவருக்கு தேர்வாளராக வந்தவர் தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த பாஜ்பாய்.

பரபரப்பான மதமாற்றம்
"ஆய்வின் மையக்கரு மீனாட்சிபுரம்" நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1981 பிப்ரவரி மாதம் 200-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் இஸ்லாமிய மதத்தை தழுவினர். இதனால் அப்போது ஏற்பட்ட கலவரம் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது. அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் மக்வானாவும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனும் செய்வதறியாது திகைத்து நின்ற சம்பவம் அது. இப்படி பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்வை ஆய்வின் கருவாக வைத்து ஆய்வறிஞர் ஆகியுள்ளார் திருமா.












Click it and Unblock the Notifications