அதெப்படி பட்டினபிரவேச தடையை நீக்கலாம்? சமூக நீதிக்கு எதிரானது- திமுக மீது விசிக கடும் பாய்ச்சல்
சென்னை: தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேச பல்லக்கு தூக்கு நிகழ்ச்சிக்கான தடையை நீக்கியது சமூக நீதிக்கு எதிரானது; வேதனையானது என்று திமுக அரசுக்கு அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தில் குரு முதல்வரின் குருபூஜை நாளில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். அதாவது ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து வீதி உலாவாக தூக்கி வருவதுதான் பட்டினப் பிரவேசம்.
இந்த நூற்றாண்டில் மனிதனை மனிதன் தூக்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; மனித உரிமைகள் மீறல் என கூறி திராவிடர் கழகம் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த காலங்களிலும் திக இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த எதிர்ப்புக்கு பணிந்து ஆதீனங்கள் பல்லக்கு தூக்கும் நிகழ்வை நிறுத்தி வைத்திருந்தன.
தருமபுர ஆதீனம்- பல்லக்கு தூக்க தடை நீக்கம்- இடையூறு செய்யும் தீய சக்திகளை தடுப்போம்: அண்ணாமலை ட்வீட்
பட்டினப் பிரவேசத்துக்கு தடை
ஆனால் இப்போது திடீரென ஆதீனம் பல்லக்கில்தான் போவேன் என கூறியதால் திராவிடர் கழகம் போராட்டம் அறிவித்தது. இதனையடுத்து மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர், ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும். ஆகையால்
மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது என கூறியிருந்தார். இந்த தடை மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
தடைக்கு எதிர்ப்பு
ஆதீனங்களின் மரபுகளில் அரசு எப்படி தலையிடலாம் என்கிற கொந்தளிப்பு வெளிப்படுத்தப்பட்டது. மனிதனை மனிதன் சுமப்பது எந்த அடிப்படையில் நியாயம் என மற்றொரு தரப்பு கேட்டது. இதில் மன்னார்குடி ஜீயர், தமிழக அமைச்சர்கள் நடமாடவே முடியாது என கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் பாஜக உள்ளிட்டவை கையில் எடுத்து அரசியலாக்கின. இந்த நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதீனகர்த்தர்கள் சந்தித்தனர்.
தடை நீக்கம்
இச்சந்திப்பைத் தொடர்ந்து இன்று பட்டினப் பிரவேசத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கும் திராவிடர் கழகம், பெரியார் தி.க. உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக அரசின் தடை நீக்கத்தை வன்மையாக கண்டித்துள்ளது.
விசிக பாய்ச்சல்
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பல்லக்கு தூக்கும் பட்டினபிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி தந்திருப்பது ஏற்புடையதல்ல! சனாதனிகளின் அழுத்தத்துக்கு பணிவது சமூகநீதிக்கு எதிரானதாகும். தேவதாசி முறையை ஒழித்தது திராவிட மாடல். உடன்கட்டை ஏறுவதை ஒழித்து விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தது திராவிட அரசியல்! உறுதியான சனாதன எதிர்ப்பில் தான் சமூகநீதியின் இருப்பு உள்ளது.சமூகநீதியில் தான் சமத்துவத்தின் உயிர்ப்புள்ளது.அந்த சமத்துவத்துக்கு எதிரான பட்டினபிரவேசத்தை அரசு நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.அரசின் சமரச நிலைப்பாடு வேதனைக்குரியதாகும்.ஏற்கத்தக்கதல்ல! இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.