அது எப்படி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி? திருமா தாக்கல் செய்த மறு ஆய்வு மனு.. தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
விஜயதசமி, 75-வது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து செப்டம்பர் 28க்குள் அனுமதி தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க உத்தரவிட்டிருந்தது.

தொல். திருமாவளவன் மனு
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் மத நல்லிக்கணத்தை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது; இந்த ஊர்வலத்துக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.

ஹைகோர்ட் விசாரணை
ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.

அப்பீல் வழக்கு
இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் 28ஆம் தேதி திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தை நாடுங்கள்
இந்த முறையிட்ட கேட்ட நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் அது விசாரணைக்கு உகந்ததல்ல என விளக்கம் அளித்தனர்.

திருமாவளவன் மறு ஆய்வு
இதனிடையே திருமாவளவன் தாக்கல் செய்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பிரச்னை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிட்டார். மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்னை எனவும், அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும் எனவும், மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications