பாஜக காமெடி பன்றாங்க.. ‘அவங்க’ ஜெயலலிதாவுக்கு துரோகம் பன்றாங்க! அட்வைஸ் கொடுக்கும் திருமாவளவன்!
சென்னை : ஜெயலலிதாவின் கீழ் இயங்கிய அதிமுகவினர் தற்போது நான்கு குழுக்களாக பிரிந்துள்ளனர். இது அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம் எனவும், அதிமுக சிதறி கிடப்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல திராவிட அரசியலுக்கு ஊறுவிளைப்பதாக அமையும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை கடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அவர்களுக்கும் சிக்கலாகவே இருக்கிறது. இதனால் எடப்பாடி ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும் என பாஜக விரும்புகிறது.
பிரதமர் மோடி தமிழகம் வந்த போது இருவரும் ஒன்றாக வரவேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டதாகவும் இதனால் இருவரும் ஒன்றாகவே பிரதமர் மோடியை வரவேற்றதாக கூறுகின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய தொடங்கி உள்ளது.
ஒரு கவர்னரை பார்த்து முட்டாள்னு சொல்றாங்க! 'புரியும்’ மாதிரி நடவடிக்கை இருக்கும்! தமிழிசை வார்னிங்
அதிமுக தனித்து போட்டி
பாஜக தனித்து போட்டியிட முடியுமா என மறைமுகமாக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில் தனது தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்றுக் கொண்டாலும் கட்சிக்கும் தன்னையே தலைமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் பாஜகவுடன் கூட்டணி அல்லது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மெகா கூட்டணி
பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற பொருள்படும்படி எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் அவரது முயற்சி வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெகுவாக பாராட்டி இருக்கிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக விலக்கப்பட்டால் மேலும் சில கட்சிகள் இணையும் என கூறப்பட்ட நிலையில், திருமாவளவனின் பராட்டு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதனால் அதிமுக மெகா கூட்டணி குறித்த பேச்சுகளும் தீவிரமாகி வருகிறது.
தொல்.திருமாவளவன்
இந்நிலையில் அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் விசிக தொல்.திருமாவளவன். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," இந்தியாவில் ஜி-20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்ததன் அடிப்படையில் இன்று நானும் கூட்டத்தில் பங்கேற்க செல்கின்றேன்.
பாஜகவினர் காமெடி
தமிழகத்தில் பாஜகவினர் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களே நகைச்சுவை செய்துவிட்டு அவர்களை சிரித்துக் கொள்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவை கண்டு யாரு அச்சம் படுவதற்கு எதுவும் இல்லை. தமிழ்நாட்டை குறி வைத்துள்ள பாஜக இளையராஜா போன்றவர்களை வைத்து இங்கு அரசியல் செய்யலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது. காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். எனவே தமிழக மக்கள் அதை பொருட்படுத்தவில்லை அது பற்றி பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஜெயலலிதாவுக்கு துரோகம்
ஜெயலலிதாவின் கீழ் இயங்கிய அதிமுகவினர் தற்போது நான்கு குழுக்களாக பிரிந்துள்ளனர். இது அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம். அதிமுக சிதறி கிடப்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல திராவிட அரசியலுக்கு ஊறுவிளைப்பதாக அமையும். இதை பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.