துணை ராணுவ வீரர் தேச துரோகி! அண்ணாமலை விளம்பர அரசியல்.. ஆளுநருக்கும் அதிகாரமில்லை! வன்னியரசு சுளீர்!
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த துணை ராணுவ வீரர் தேச துரோகி எனவும், அவருக்கு பாதுகாப்பு கேட்டு ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருப்பது இழிவான விளம்பரத்துக்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தை சார்ந்த ராணுவ வீரர் ஒருவர் திருமாவளவனை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் தமிழ்நாட்டில் தனியாக நின்று ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாத திருமாவளவன் தனி தமிழ்நாடு கேட்கிறார்..? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீர்களா "நீ ஆம்பளையா இருந்தா ஒரு நாள் வீதியில் நின்று தனி தமிழ்நாடு வேண்டும் என்று போராடிப்பார், உன் வாயாலயே வந்தே மாதரம் என்று சொல்ல வைப்போம்"என்று கூறியிருந்தார்.

துணை ராணுவ வீரர்
அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம், லத்தூர் ஒன்றிய செயலாளர் மணிமாறன உள்ளிட்ட சில விசிக நிர்வாகிகள் அந்த ராணுவ வீரருக்கு போன் செய்து எப்படி எங்கள் தலைவரை மரியாதை குறைவாக பேசலாம்? மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அந்த ராணுவ வீரர், எல்லையில் பாகிஸ்தான்காரன் துப்பாக்கி, பீரங்கி எல்லாம் தூக்கி காட்டினாலே பயப்பட மாட்டோம் நீங்கள் போன் போட்டு மிரட்டினால் நான் என்ன மிரண்டு விடுவேனா..? என்று கூற உடனே ஏடாகூட ஆபாச வார்த்தைகளை சொல்லி அவர் குடும்பத்தை திட்டி தீர்த்த விசிக நிர்வாகிகள், கோவத்தின் உச்சிக்கு சென்று நீ... டெல்லியில் தான் இருப்ப... ஆனா உங்க அப்பா,அம்மா, தம்பி எல்லாம் இங்கதான் இருக்காங்க..? என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

அண்ணாமலை
அந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த ராணுவ வீரருக்கு, அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பலரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த ராணுவ வீரரை தொலைபேசியில் அழைத்து பேசி அவருக்கு ஆறுதல் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த ராணுவ வீரருக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக பாஜக தயாராக இருப்பதாகவும் தைரியமாக பணியாற்றும் படியும் தொலைபேசி மூலமாக பேசியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
மேலும் அந்த ராணுவ வீரரிடம் தொலைபேசி வாயிலாக மிரட்டிய கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மணிமாறன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவாகரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் அண்ணாமலை சந்தித்து பேசியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த துணை ராணுவ வீரர் தேச துரோகி எனவும், அவருக்கு பாதுகாப்பு கேட்டு ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருப்பது இழிவான விளம்பரத்துக்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்

வன்னியரசு
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வன்னியரசு,"நீங்கள் சொல்லும் நபர் இராணுவ வீரரல்ல:
CRPF (central Reserve police force) எனப்படும் துணை ராணுவத்தை சார்ந்தவன்.நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களை விமர்சித்திருப்பது ராணுவ விதிகளுக்கு எதிரானதாகும்.அதுவும் அவன் இருக்கும் இடத்தின் லொகேசனை பகிர்ந்திருப்பது தேச துரோகம். அப்படிப்பட்ட தேசத்துரோகிக்கு பாதுகாப்பு கேட்டு ஆளுனரை சந்தித்திருப்பது இழிவான விளம்பரத்துக்காகவே! இதில் ஆளுனருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?அவரால் என்ன செய்ய முடியும்?" என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications