தொடரும் விவசாயிகளின் துயரம்! மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்! வேல்முருகன் வைக்கும் முக்கிய டிமாண்ட்!
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் பற்றி கவலை தெரிவிக்கும் வேல்முருகன்.
சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்சேதத்துக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில் கதிர்கள் முற்றி அறுவடை தொடங்கியுள்ள நேரத்தில், கனமழையால் விளைந்து நின்ற சம்பா பயிர்கள் கடுமையாக சேதமாகியுள்ளன.
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த, 2 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் சாகுபடி பயிர்கள் சேதமடைந்துள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை உலர வைக்க முடியாத நிலையும் உள்ளது.
சம்பா அறுவடைக்கு பிறகு, உளுந்து, பயிறு, கடலை போன்ற சாகுபடிகளையும் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நெல் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இன்னும் சில நாட்களுக்கு அறுவடைக்கு தொழிலாளர்கள் இறங்குவதோ, இயந்திரங்கள் இறக்கப்படுவதோ இயலாது.
கர்நாடகாவுக்கு கூட ரூ 5000 கோடி ஒதுக்கீடு.. ஆனால் தமிழகத்திற்கு அநீதியா?.. வேல்முருகன் விமர்சனம்
இதனால், விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.எனவே, டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மதிப்பீடு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.