கதவை படார் என்று சாத்திய காங்கிரஸ்! இனி சான்ஸே இல்லை! விஜய்க்கு வைக்கப்பட்ட செக்! குதிக்கும் அதிமுக
சென்னை: காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடனான தனது நீண்டகால கூட்டணியை முறித்துக் கொள்ள விரும்பவில்லை எனத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி வருவதால், நடிகர் மற்றும் அரசியல்வாதியான தவெக விஜய் ஒரு இக்கட்டான அரசியல் சூழ்நிலையை எதிர்கொண்டு உள்ளார். விஜய்க்கு இரண்டு விதமான அரசியல் வழிகள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.
கடந்த சில மாதங்களாக 'இந்தியா' கூட்டணியில் சலசலப்பு இருப்பதாகக் கூறி குளிர்காய நினைத்தார்கள். எந்தக் காலத்திலும் 'இந்தியா' கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது, என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசி உள்ளார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய அறிவிப்புகள் வரும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்க்கலாம் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இம்முடிவின் நோக்கம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வப்பெருந்தகை முக்கிய பேச்சு
நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை, தி.மு.க. மற்றும் பிற கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணி பலமாக இருப்பதாகவும், கூட்டணியில் பிளவு ஏற்படுத்த யாராலும் முடியாது என்றும் கூறினார்.
"கடந்த இரண்டு மாதங்களாக சில சலசலப்புகள் நிலவின. கூட்டணியின் எதிர்காலம் என்ன, அது எந்த திசையில் செல்லும்? இந்த ஊகத்தைப் பயன்படுத்தி பலரும் ஆதாயம் தேட முயன்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.
விஜய்க்கு வேறு வழியில்லை
காங்கிரசின் இந்த முடிவால் தவெக விஜய் ஒரு முக்கிய அரசியல் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு உள்ளார். விஜய்க்கு இரண்டு வியூக ரீதியான வழிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
ஒன்று அவர் அதிமுக-பாஜக கூட்டணியுடன் இணையலாம் அல்லது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தேர்வு செய்யலாம். இரண்டு முடிவில் எது ஒன்று எடுத்தாலும் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே அவருக்கு செல்வாக்கு வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் தேர்தல் வெற்றி பெரும்பாலும் கள அளவிலான அமைப்பு வலிமையையும் கூட்டணிக் கணக்கையுமே சார்ந்துள்ளது. கூட்டணி இல்லாமல் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது.
விஜய் - கூட்டணி இல்லாமல் சிக்கல்
பெரிய கூட்டணியின் ஆதரவு இல்லாமல் தனித்துப் போட்டியிடுவது, வாக்குச்சாவடி அளவிலான பலம், தொண்டர்களைத் திரட்டுவது மற்றும் மாநில அளவிலான தேர்தல் பணிகள் செய்ய ஆள் இல்லாமல் இருப்பது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும். கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்குவது விஜய்க்கு பெரும் சவால்களை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே சமயம், அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவதும் சில சிக்கல்களைக் கொண்டுள்ளது.
பாரம்பரிய திராவிட அரசியலிலிருந்தும், தேசிய அரசியலில் இருந்தும் தான் ஒரு தனித்த, வேறுபட்ட அரசியலை செய்ய போகிறேன் என்று விஜய் ஏற்கனவே முன்னிறுத்தியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியுடன் இணைவது, அவரை ஒரு மாற்றாகப் பார்க்கும் அவரது முக்கிய ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரை அந்நியப்படுத்தக்கூடும்.
தவெக-க்கு நெருக்கமான வட்டாரங்கள், கட்சிக்குள் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கின்றன. எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன், கட்சித் தலைவர்கள் தொகுதி வாரியான தரவுகள், வாக்காளர் மனநிலை மற்றும் நீண்டகால அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து வேண்டும் என்று விஜயிடம் கோரிக்கை வைக்கின்றனர். நடுநிலை வாக்காளர்களிடையே தனது நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடிய ஒரு கூட்டணியில் அவசரமாக இணைவது சரியாக இருக்காது என்று விஜயும் எச்சரிக்கையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமைப்பு ரீதியிலான பலம்
தற்போதைக்கு, விஜய் தனது கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள், மாவட்ட அளவிலான கூட்டங்கள் மற்றும் கொள்கை அடிப்படையிலான பொதுப் பிரச்சாரங்கள் ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகிறார். விரைவில் மீண்டும் பிரச்சாரங்களை விஜய் மேற்கொள்வார்.
வரவிருக்கும் மாதங்கள் முக்கியமானவை என்றும், அவரது இறுதி முடிவு அவரது தனிப்பட்ட அரசியல் பயணத்தை மட்டுமல்லாமல், தமிழக அரசியலையும் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் நம்புகின்றனர்.
விஜய் தனித்துப் பயணிக்கிறாரா அல்லது ஒரு அதிமுக - பாஜக கூட்டணியுடன் கைகோர்க்கிறாரா என்பது இன்னும் உறுதியாக முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அவரது அடுத்த நகர்வை மாநிலம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் அரசியல் வியூக நிபுணர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.












Click it and Unblock the Notifications