"உடனே முடிவெடுங்க".. ஏற்கனவே நிலைமை மோசம்.. இப்ப தடையை வேற நீக்கிட்டாங்களே.. குமுறிய விஜயகாந்த்
தமிழகத்தில் நிலவும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்கிறார் விஜயகாந்த்
சென்னை: ஏற்கனவே தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கான தடை ரத்து செய்திருப்பது போதை பழக்கத்திற்கு மேலும் பல இளைஞர்கள் அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் நிலவும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேமுதிக அறிக்கை மூலம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
வருடந்தோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்தாலும், இதுபோன்ற உத்தரவுகளை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
போதை பொருள் ஒழிப்பு.. தமிழ்நாடு அரசு தீவிரம்.. பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி
அப்பீல்கள்
இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், அப்பீலும் தாக்கல் செய்யப்பட்டது... 4 நாட்களுக்கு முன்பு இது தொடர்பான வழக்கில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டது..
போதை பொருட்கள்
உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்ததுடன், இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டிருந்தனர்.. இந்த அதிரடி உத்தரவானது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தாறுமாறாக எகிறுமே
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்திருக்கிற நிலையில், புகையிலைப் பொருட்களுக்கான இந்த தடை நீக்கம் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.. அதனால் எனவே, இதுதொடர்பாக மத்திய அரசோடு கலந்து ஆலோசித்து தமிழக அரசு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுக்க வேண்டும், தமிழ்நாட்டிற்குள் இந்த புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்க உரிய சட்டம் கொண்டுவருவது குறித்தும் சட்டவல்லுநர்களுடன் தமிழக அரசு உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய முடிவினை எடுத்திடவேண்டும்" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
விஜயகாந்த் வேதனை
இந்நிலையில், தேமுதிகவும் தன்னுடைய கோரிக்கையை பதிவு செய்துள்ளது.. இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு விதித்த தடையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
விஜயகாந்த்
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கான தடை ரத்து செய்திருப்பது போதை பழக்கத்திற்கு மேலும் பல இளைஞர்கள் அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்து உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதைப் பொருட்கள் இல்லா மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைந்திட வேண்டும்" என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.