விஜயகாந்த்தின் விருப்பம்.. ‘நானே பேசுறேன்’.. விரைவில் தேமுதிகவில் அதிரடி அறிவிப்பு.. இனி வேகம் தான்!
சென்னை : தேமுதிக பொருளாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் விரைவில் ப்ரொமோஷன் செய்யப்படவிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் இந்த அறிவிப்பை சீக்கிரமாகவே வெளியிட விரும்புகிறாராம்.
தேமுதிக தொடங்கப்பட்டு இன்று 18ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், கட்சியின் நலன் கருதி விஜயகாந்த் ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியை வழிநடத்தி வரும் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக செயல் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் வலியுறுத்தி வரும் நிலையில், விஜயகாந்த்தும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளாராம்.
இதனால், விரைவில் நடைபெற இருக்கும் அக்கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த்தின் புரொமோஷன் அறிவிப்பு வெளியிடப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தேமுதிக விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபடுவதில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் வெளியானாலும், கட்சியின் முக்கிய முடிவுகளை அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரே எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிரேமலதாவை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வர விஜயகாந்த் விரும்புகிறாராம்.

பிரேமலதாவுக்கு ப்ரொமோஷன்
கட்சியை வழிநடத்தி வரும் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தி உள்ளனர். இதனால் விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தி முக்கிய மாற்றங்கள், புதிய பொறுப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்கின்றனர் கேப்டனின் தொண்டர்கள்.

சீக்கிரம்
பிரேமலதாவை தலைவர் பொறுப்பில் நியமிக்கவே விஜயகாந்த் விரும்புகிறாராம். ஆனால், பிரேமலதாவோ, அந்தப் பதவியில் நீங்கள் நீடிப்பதுதான் சரியாக வரும் எனக் கூறியிருக்கிறாராம். எனினும், செயல் தலைவர் போன்ற பதவிக்கு பிரேமலதா வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள இருப்பதால் அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிட விஜயகாந்த் விரும்புகிறாராம்.

விஜயகாந்த்தின் விருப்பம்
2024 தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த வேண்டும், வலுவான கூட்டணியில் இணைந்து நமக்கான சீட்களை உறுதி செய்ய வேண்டும், இப்போதைக்கு எந்த மாற்றமும் வேண்டாம் என பிரேமலதா கூறி வருகிறாராம். எனினும், கட்சி நிர்வாகிகளை சந்திக்க விரும்புவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளாராம். அப்போது, பிரேமலதாவுக்கு ப்ரொமோஷன் பற்றி விஜயகாந்த், நிர்வாகிகளிடம் பேசுவார் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

விஜய பிரபாகரன்
அதேபோல், விஜய பிரபாகரன் தே.மு.தி.க கட்சிக் கூட்டங்களிலும், நிர்வாகிகள் இல்ல விழாக்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத நிலையில் கட்சிக்காக உழைக்கும் அவர்தான் தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கிறார். அவருக்கு தே.மு.தி.க இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு அளிக்க வேண்டும், இதன் மூலம் இளைஞர்களை கட்சியில் ஈர்க்கலாம் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். தலைமையும் இதே முடிவிலேயே இருக்கிறது.

18ஆம் ஆண்டு விழா
தே.மு.தி.க 18-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா இன்று நடைபெற்றது. தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா இதில் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார். பெண்களுக்கு சேலை, குடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இலக்கை அடைவோம்
இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்தே தீரும். தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உட்கட்சி தேர்தல் முடிவடைந்ததும் தே.மு.தி.க பொதுக்குழு-செயற்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மண்டல, மாநில அளவிலான மாநாட்டு ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications