இது உங்க வேலையேயில்லையே.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்தால் அறநிலையத்துறையை சாடிய செந்தில்குமார் எம்பி
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு இந்து சமய அறநிலையத்துறை வாழ்த்து தெரிவித்ததற்கு கருணாநிதி கூறியதாக சில விஷயங்களை குறிப்பிட்டு திமுகவின் தர்மபுரி எம்பி செந்தில்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள், இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
மேலும் பல அமைப்புகள், சங்கங்கள் சார்பில் பொது இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று முதல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
வைகை அணையில் 4,000 கனஅடி தண்ணீர் திறப்பு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்பட மத்திய அமைச்சர்கள், பாஜக உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே வழக்கம்போல் முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
அறநிலையத்துறை வாழ்த்து
இருப்பினும் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில், ‛‛தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்து சமய அறநிலையத்துறை'' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
திமுக எம்பி எதிர்ப்பு
இதற்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுகவின் எம்பியான செந்தில்குமார் எம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவுகம் இருந்த கருணாநிதி கூறியதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‛‛ இந்து சமய அறநிலையத்துறை என்பது, அம்மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாக அமைப்பு மட்டும் தான். கடவுள் வழிபாடு செய்வதோ, அச்சமய விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதோ அந்த துறையின் பணி அல்ல- கலைஞர். சொன்னது கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவரிடம்'' என கூறியுள்ளார். இதன்மூலம் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
முந்தைய சர்ச்சை
சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை திட்டினார். ‛‛இது இந்து மத பூஜை செய்யும் இடமில்லை. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இது இந்து மத நிகழ்ச்சியா? மற்ற மதத்தினா் எங்கே? கிறிஸ்டியன் பாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி'' என பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.