ஆமா.. சென்னை மாநகராட்சியில் முழு ரிசல்ட் எப்போது தெரியும்? ககன்தீப் சிங் கொடுத்த அப்டேட்
சென்னை மாநகராட்சியில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அமைதியாக நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
சென்னை: 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். பிற்பகலுக்குள் ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12, 601 பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என 268 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு, பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. பாரதி மகளிர் கல்லூரி மண்டலம் 5 வாக்குப்பதிவு எண்ணும் மையத்தை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வாக்குப்பதிவுகள் சரியாக எட்டு மணிக்கு தொடங்கி விட்டது. தபால் வாக்குப் பெட்டிகளும் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்த கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வார்டு வாரியாக எண்ணப்பட்டு வருகின்றன.
மின்னணு வாக்கு இயந்திரம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஏஜென்டுகள் முன்னிலையில் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகிறது . கணினி வாயிலாக அவை உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எல்லா இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடத்தப்பட்டு வருகிறது.
வேட்பாளர் அல்லது வேட்பாளரின் தலைமை ஏஜெண்ட் தேர்தல் அலுவலரின் அருகில் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது . இரண்டு , மூன்று சுற்றுகளில் வெற்றி நிலவரம் என்பது தெரிய வந்துவிடும். நண்பகல் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என்றார்.












Click it and Unblock the Notifications