திருடப்படும் 'சாமானியனின்' டேட்டா.. அத்துமீறுகிறதா கட்சிகள்?.. தொடரும் 'பல்க்' மெசேஜ் அட்டூழியம்
சென்னை: தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், வாக்காளர்களின் பெர்சனல் மொபைல் எண்ணுக்கு, கட்சிகள் சார்பில் தொடர்ந்து 'பல்க்' மெசேஜ்கள் வந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே மீதமுள்ளன. அதற்குள் எவ்வளவு மக்கள் ஆதரவை திரட்ட முடியுமோ, அவ்வளவு திரட்ட அரசியல் கட்சிகள் போராடிக் கொண்டிருக்கின்றன.
அடுத்த 5 ஆண்டுகளுக்கான தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல் ஆச்சே.. லேசுல விட்டுட முடியுமா? ஆனால், அதற்கு அக்கட்சிகள் எடுக்கும் யுக்திகள் தான் சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மொபைல் அழைப்பு
தகவல் திருட்டு.. இந்த வார்த்தைகளை நாம் அவ்வப்போது ஆங்காங்கே கேட்டிருப்போம். நமது தனிப்பட்ட தகவல்கள் நமக்கே தெரியாமல் கசிந்து யாரோ ஒருவரின் கைகளில் நமது முழு ஜாதகமும் இருக்கும். புரியும்படி சொல்லவேண்டுமெனில், உங்கள் நம்பருக்கு போன் செய்து, சார்.. 'பைக் லோன் இருக்கு, கார் லோன் இருக்கு, ஹவுஸிங் லோன் இருக்கு? வேண்டுமா? என்று கேட்டிருப்பார்கள். இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானோருக்கு இப்படி அழைப்புகள் வந்திருக்கும்.
பக்குவமா பேசி
இவையெல்லாம், நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மிடம் இருந்து உருவிய தகவல்கள் தான். நாம் ஷாப்பிங் மால் செல்லும் போதோ, கண்காட்சிக்கு செல்லும் போதோ, இவ்வளவு ஏன்.. உங்கள் ஏரியாவில் மொத்த காய்கறி விற்பனை கடைக்கு சென்று தக்காளி வாங்கிக் கொண்டிருக்கும் போதோ, 'ஒருவர் கையில் நோட் மற்றும் பேனாவுடன் வந்து, 'சார்.. கிஃப்ட் ஆஃபர் இருக்கு. நீங்க உங்க பெயர் மற்றும் மொபைல் நம்பர் கொடுங்க. குலுக்கலில் செலக்ட் ஆனீங்கனா, உங்களுக்கு கார், ஏசி, வாஷிங்மெஷின் போன்ற கிஃப்ட் கிடைக்கும்'-னு பேசி பக்குவமா பேசி வாங்கிட்டுப் போயிடுவாங்க.
நமக்கே ஆப்பு
நீங்கள் அங்கு கொடுக்கும் உங்கள் மொபைல் எண், டேட்டா சென்டர்களுக்கு சென்று, அங்கிருந்து பல இடங்களுக்கு பரிமாறப்பட்டு, கடைசியில் உங்களுக்கே போன் செய்து, உங்களையே கன்வின்ஸ் செய்து லோன் வாங்க வைத்து, லொங்கு எடுத்து விடுவார்கள். இதுதான் தகவல் திருட்டு. இதை செய்வதற்கு என்றே, சென்னையில் கம்பீரமாக பல அடுக்கு மாடிகள் கொண்ட பல்வேறு டேட்டா சென்டர்கள் உள்ளன. இப்போது இவை தேர்தல் நேரத்திலும் நம்மை சோதிக்க வந்துள்ளன.
ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் விதிகளுக்கு புறம்பான வகையில் பா.ஜ.க மெசேஜ் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்த செய்தியை நீங்கள் கவனித்திருக்கலாம். பொதுவாக வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் செல்போன் எண் குறித்த தகவல் இருக்காது. ஆதாரில் மட்டுமே செல்போன் எண் இணைக்கப்படும். அப்படியெனில், புதுச்சேரியில் உள்ள வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு பாஜக சார்பில் எப்படி மெசேஜ் போனது? என்பதே கேள்வி. இது குறித்த வழக்கில், புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பா.ஜ.க-வினருக்கு எப்படி கிடைத்தது என ஆதார் ஆணையம் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
எப்படி கிடைத்தது?
இந்த நிலையில் தான் JD-ARCMNM என்ற எண்ணில் இருந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அனுப்புவது போன்ற மெசேஜ் சில வாக்களர்களின் மொபைல் எண்ணுக்கு வந்துள்ளது. அதில், கமல்ஹாசன் எந்த இடத்திற்கு பிரசாரம் செய்ய வருகிறார் என்ற தகவல் குறிப்பிடப்பட்டு, ஒரு மொபைல் எண்ணும் அதே மெசேஜில் இணைக்கப்பட்டுள்ளது. இறுதியில், துணை மாவட்ட செயலாளர் பெயரும் அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டு, அவர் அனுப்புவது போன்றே அந்த மெசேஜ் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியெனில், அந்த துணை மாவட்ட செயலாளருக்கு வாக்காளர்களின் மொபைல் எண் எப்படி கிடைத்தது? இப்படி நமது அன்றாட தேவைகள் முதல் தேர்தல் வரை அனைத்திலும் நமது தகவல் லீக் ஆகிறது என்றால், இந்த 'டிஜிட்டல் உலகம்' எதை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது?