இலங்கை: போர் குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது.. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது: ராமதாஸ்
இலங்கையில் மக்கள் சக்தி வென்றிருக்கிறது போர்க்குற்றவாளிகள் தப்ப அனுமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது. ராஜபக்சேக்கள் அதிகாரத்திலிருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளனர் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இனப்படுகொலையாளிகள் தப்பிக்க உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. மக்களின் கொந்தளிப்பை தாங்க முடியாத ராஜபக்சே குடும்பமே தலை தெறிக்க ஓடிவிட்டது. மே 9ஆம் தேதி முதலே கலவரம் தீவிரமடைந்துள்ளது. என்ன நடந்தாலும் பதவி விலகப்போவதில்லை என்று கூறி வந்த கோத்தபாய ராஜபக்சே இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிட்டார்.
கடும் நெருக்கடி.. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா? அடுத்து யார் ஆட்சி?
அதிபர் மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் வசமாகியுள்ளது. அங்கே தங்கள் இஷ்டத்திற்கு புகுந்து விளையாடுகிறார்கள் போராட்டக்காரர்கள். இந்த நிலையில் இலங்கை நிலவரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர்
மக்கள் ஆத்திரம்
இலங்கையை திவாலாக்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனர். மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் கோத்தபாய தப்பியோடியுள்ளார்!
இனப்படுகொலை
இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபக்ச குடும்பம் அதை மறைக்க தமிழர்களை இனப்படுகொலை செய்தது, அதற்காக கடன் வாங்கியது, இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதித்தது ஆகியவை தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்!
விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சே குடும்பம்
அந்த வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை ஈழத்தமிழர் இனப்படுகொலையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எந்த சிங்கள மக்களை வெறியேற்றி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்றார்களோ, அந்த சிங்கள மக்களாலேயே ராஜபக்ச குடும்பம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது!
தப்பிக்க அனுமதிக்கக் கூடாது
ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது. ராஜபக்சேக்கள் அதிகாரத்திலிருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளனர். இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படவில்லை. இனப்படுகொலையாளிகள் தப்பிக்க உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது!