பாஜகவில் வார் ரூம்..மன அழுத்தம்..விளக்கம் கேட்காமலேயே சஸ்பெண்ட்.. குமுறும் காயத்ரி ரகுராம்
சென்னை: என்னுடைய சொந்த செலவில் நான் பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். நான் கடந்த 8 ஆண்டு காலமாக கடன் வாங்கி உதவி செய்திருக்கிறேன். கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி என்னை பாஜகவை விட்டு நீக்கியது வருத்தத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த காயத்ரி ரகுராம் தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்தார்.
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்.. 6 மாதம் கழித்து பாஜகவிலிருந்தே அதிரடியாக நீக்கமா? என்ன நடக்கும்?
உதவி செய்தேன்
கட்சியில் இணைந்த நாளில் இருந்தே பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். வெளிநாட்டில் சிக்கித்தவித்த பல தமிழர்களை மீட்டு கொண்டு வந்திருக்கிறேன். என்னுடைய சொந்த செலவில் நான் பலருக்கும் உதவி செய்திருக்கிறேன். நான் கடந்த 8 ஆண்டு காலமாக கடன் வாங்கி உதவி செய்திருக்கிறேன். கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி என்னை பாஜகவை விட்டு நீக்கியது வருத்தத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தவறான பதிவுகள்
செல்வகுமார் என்ற நபர் கட்சியில் சமீபத்தில் வந்து சேர்ந்தவர். அவர் கட்சிக்கு வந்தே 3 மாதம்தான் ஆகிறது. அவர் கட்சியில் சேர்ந்த உடனேயே பொறுப்பு கொடுக்கின்றனர். அவர் எனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். என்னைப் பற்றிய தவறான பதிவுகளுக்கு லைக் போடுகிறார். அதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.
விளக்கம் கேட்கவில்லை
கட்சி தலைமையிடம் விளக்கம் தர எனக்கு நேரம் கொடுக்கவில்லை. நான் விளக்கம் தரும் முன்னரே என்னை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து விட்டனர். கட்சி தலைவரிடம் பேசுவதற்காக நேரம் தரவில்லை. பொதுவாக கட்சி தலைவரிடம் விளக்கம் தர நேரம் தர வேண்டும். எனக்கு அந்த நேரத்தை தரவில்லை. எந்த கேள்வியும் கேட்காமல், நோட்டீஸ் அளிக்காமல் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.
அண்ணாமலை ரொம்ப பிசி
பாஜக தலைவர் அண்ணாமலை எப்பவுமே மிகவும் பிசியாக இருப்பார். வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினால் அதற்கு பதில் தருவார். இந்த சம்பவம் குறித்து வாட்ஸ் அப்பில் கூட நேரம் தரவில்லை. என் தரப்பு நியாயத்தை கூற நான் தயாராகி வந்தேன். அதற்குள் என்னை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்து விட்டனர். கட்சிக்குள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என் தரப்பு நியாயத்தை கேட்கவேயில்லை. அதற்குள் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வார் ரூம்
3 மாதத்திற்கு முன்புதான் செல்வகுமார் கட்சிக்கு வந்து சேர்ந்தார். கோவை குரூப் என்று ஒன்று வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் யார் என்றே தெரியாது. செல்வகுமாருடன் சேர்ந்து பலர் குரூப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு வார் ரூம் போலவே செயல்படுகிறார்கள். அங்கிருந்து வந்த டார்கெட்தான் என்னை சிக்க வைத்துள்ளது. நான் பொதுவாக ஒரு பதிவைதான் போட்டேன். யாரை குறிப்பிட்டும் ட்வீட் செய்யவில்லை. யார் பணம் தருகிறார்களோ அங்கே போங்கள் என்றுதான் பதிவிட்டேன் என்று கூறியுள்ளார்.