திமுகவுடன் உறவு வைத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
சென்னை: அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இணைய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.
"சரவெடி".. ஓபிஎஸ் திடீரென சமாதானமாக செல்ல முயல்வது ஏன்? பின்னணியில் "மாஸ்டர் பிளான்".. என்ன ஆகும்?
ஓபிஎஸ் அழைப்பு
கசப்புகளை மறந்து விட்டு அதிமுக ஒன்று பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள். நானும் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். கூட்டுத் தலைமையாக செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.
இபிஎஸ் பேச்சு
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின் இரு அணிகளாக பிரிந்து, பின்னர் இணைந்தோம். அதிமுகவை சிலர் தன்வசம் கொண்டுபோக நினைத்ததே இன்றைய நிலைக்கு காரணம். பொதுக்குழு உறுப்பினர்களால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகின.
ஒற்றைத் தலைமை விவகாரம்
அதிமுக சட்டவிதிகளை இயற்றவோ, மாற்றவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 2663 பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக தொண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிவித்தனர்.
ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது நியாயமா. ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது. பதவியில் இருக்க வேண்டும் என்பதே விருப்பம். ஓபிஎஸ் குடும்ப உறுப்பினர்களுக்கும், மகனுக்கும் பதவி வேண்டும் என்பதே அவர் விருப்பம். சசிகலாவை எதிர்த்து தானே தர்ம யுத்தம் செய்தார்? இப்போது அழைப்பது ஏன்?
திமுகவோடு தொடர்பு
திமுகவுடன் இணைந்து செயல்பட்ட மற்றும் அதிமுக அலுவலகத்தில் புகுந்து கொள்ளையடித்த பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது. எப்போதெல்லாம் அவருக்கு பின்னடைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஓபிஎஸ் இப்படி ஒன்று சேர அழைப்புவிடுப்பது வழக்கம்தான். அவருக்கு செல்வாக்கு இருந்தால் பொதுக்குழுவிற்கு வந்து அதை நிரூபிக்கட்டும். சென்றமுறையும் பொதுக்குழுவிற்கு அவரை அழைத்தோம். ஆனால் அவர் வராமல் அதிமுக அலுவலகம் சென்று வன்முறையில்தான் ஈடுபட்டார்.
ஓபிஎஸ்-ன் எதிர்ப்பு பட்டியல்
முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு, ஒற்றைத் தலைமை விவகாரம் என தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தவர் ஓபிஎஸ். ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்துடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் 15 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். நான் எப்போதும் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. படிப்படியாக அதிமுகவில் பொறுப்புகளை பெற்றுள்ளேன்.
உண்மை விசுவாசி யார்?
ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி என்று கூறுகிறார். 1989ல் ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளருக்கு எதிர்த்து ஜானகி அணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளருக்கு வேலை செய்தவர் தான் ஓபிஎஸ். ஆனால் நான் அப்படியல்ல. அதேபோல் பதவிக்காக ஓபிஎஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார். அதற்காகவே இப்போது இணைப்புக்கு அழைக்கிறார். அதனால் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.