இத்தாலியும், நியூயார்க்குமே தப்பியாச்சு, சென்னைவாசிகளே ஹேப்பியா இருங்க! உற்சாக 'மாஸ்க்' ஆய்வு முடிவு
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முகக் கவசம் அணிவது மிகவும் முக்கியமானது என்பது அனுபவப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியில் வெளியாகியுள்ளது இந்த ஆய்வு முடிவு. ஏப்ரல் 6 ஆம் தேதி வடக்கு இத்தாலியில் மற்றும் ஏப்ரல் 17 ஆம் தேதி நியூயார்க் நகரில் முககவசம் அணியும் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இதன்பிறகு, நோய்த்தொற்று போக்குகள் வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த இரு பகுதிகளுமே, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவையாக இருந்தவை.
கொரோனா: 18 நாட்கள் வென்டிலேட்டர்.. மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு வந்த 4 மாதக் குழந்தை டிஸ்சார்ஜ்
நியூயார்க், இத்தாலியில் குறைந்த கொரோனா
"முகக் கவசம் பாதுகாப்பு நடவடிக்கை மட்டும் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளது. அதாவது இத்தாலியில் ஏப்ரல் 6 முதல் மே 9 வரை 78,000க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து தப்பியுள்ளனர். ஏப்ரல் 17 முதல் மே 9 வரை நியூயார்க் நகரில் 66,000 க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து தப்பியுள்ளனர்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நியூயார்க்கில் முகக் கவசம் அணிவது நடைமுறைக்கு வந்தபோது, தினசரி புதிய தொற்று விகிதம் ஒரு நாளைக்கு சுமார் 3% குறைந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரம், நாட்டின் பிற பகுதிகளில், தினசரி புதிய நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தன.
முகக் கவசம் முக்கிய பங்கு
இத்தாலி மற்றும் நியூயார்க் நகரங்களில் முகக் கவசம் அணியும் விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் சமூக விலகல், தனிமைப்படுத்தல் மற்றும் சானிடைசர் கொண்டு கை சுத்தப்படுத்துதல் ஆகிய அனைத்தும் நடைமுறையில் இருந்தன. ஆனால் அவை நேரடி தொடர்பு மூலம் வைரஸ் பரவலைக் குறைக்க மட்டுமே உதவின. அதே நேரத்தில் முகத்தை முகக் கவசத்தால் மூடுவது காற்றில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கூச்சலிட்டாலும் பயமில்லை
இந்த நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் பெரிய கூட்டங்களின் அமைப்பாளர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை கூறியுள்ளது. "கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க துணியால் முகத்தை மறைத்துக்கொள்ளுங்கள். கூச்சலிடுதல், கோஷமிடுதல் அல்லது பாடுவது போன்றவற்றின் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்க இது அவசியம்" என்று தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை மக்களே பயப்பட வேண்டாம்
சென்னையிலும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் செல்கிறது. ஆனால், நியூயார்க், இத்தாலி போன்றவையே, மீண்டிருக்கும்போது, சென்னைவாசிகள் எதற்காக அச்சப்பட வேண்டும். ஆய்வுகள் குறிப்பிடுவதை போல.. அரசுகள் வேண்டுகோள்விடுப்பதை போல, வெளியில் செல்லும்போது முகக் கவசத்தை எப்போதும் அணியுங்கள். குறிப்பாக, முகத்தில் அணியுங்கள். கழுத்தில் தொங்கவிட்டு அணிவதால் எந்த பலனும் ஏற்படாது என்பதை உணருங்கள். நிலைமை நிச்சயம் மாறும், நம்பிக்கையாக இருங்கள்.