"மிஸ்டர் பிஸி பிரதமரே.. மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.." என்னை முடித்து விட முடியாது.. மமதா ஆவேசம்
சென்னை: மிஸ்டர் பிஸி பிரதமர்.. மிஸ்டர் மன் கி பாத் பிரதமர்.. என்னை முடித்து விட நீங்கள் நினைத்தாலும் அது முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மமதா பானர்ஜி மற்றும் நரேந்திர மோடி இடையேயான மோதல் போக்கு, சமீப காலத்தில் உச்சத்திற்கு போயுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயவை மத்திய அரசுப் பணிக்காக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தமது அரசுப் பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவரை தமது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
மோடி அரசு சொல்ல வருவது என்ன?
இந்த நிலையில்தான், மமதா பானர்ஜி அளித்த பேட்டியில், நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது: இது நாட்டுக்கு மோடி அரசு என்ன செய்தி சொல்ல விரும்புகிறது? கூட்டாச்சி தத்துவத்தை உடைத்தெறிகிறார்களா? எங்களது தலைமை செயலாளரை அவர்கள் இஷ்டத்துக்கு பணிமாற்றம் செய்ய முற்பட்டது ஏன்? அதிகாரிகள் அவர்கள் கொத்தடிமைகள் கிடையாது.
மம்தா பானர்ஜி ஆவேசம்
மாநில அரசுடன் கலந்து பேசாமல் ஐஏஎஸ் அதிகாரிகளை உங்கள் விருப்பத்திற்கு பணி மாற்றம் செய்ய முடியாது. மத்திய அரசு பணிகளில் மேற்கு வங்க மாநில கேடர் அதிகாரிகள் நிறைய பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களை எங்கள் மாநிலத்துக்கு நான் திருப்பி அழைக்கவா? இப்படி மோதிக்கொண்டு இருந்தால் நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும்.
மன் கி பாத் பிரைம் மினிஸ்டர்
"மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. மிஸ்டர் பிஸி பிரைம் மினிஸ்டர்.. மிஸ்டர் மன் கி பாத் பிரைம் மினிஸ்டர் உங்களுக்கு என்ன வேண்டும்? என்னை முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களால் முடியுமா? முடியாது. எப்போதும் முடியாது. மக்கள் ஆதரவு எனக்கு இருக்கும் வரை உங்களால் செய்ய முடியாது."
அனைவரும் இணைய அழைப்பு
அனைத்து மாநில அரசுகள் அனைத்து மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புத்திஜீவிகள் அனைத்து அரசியல்வாதிகள் அனைத்து ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். இந்த போராட்டத்தில் நாம் போராடி ஆகவேண்டும். இது எங்கள் மாநிலத்துக்கு மட்டுமேயான பிரச்சனை கிடையாது. அனைத்து அதிகாரிகளுக்குமான போராட்டம் இது. அதிகாரிகள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.
நீதிமன்றம் ஏற்காது
நான் ஒரு வழக்கறிஞர் என்ற வகையிலும் சொல்கிறேன் இதை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் அங்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு ஆவேசமாக கூறியுள்ளார் மமதா பானர்ஜி.