‘என்ன ஒரு ஒற்றுமை’- எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் ஓணம் வாழ்த்து.. போன வருஷம் ஞாபகம் இருக்கா?
சென்னை : அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இருவரும் 'ஓணம்' பண்டிகையையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியின் மூலம் இருவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே, தலைமை விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படாமல், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சிக்கல்கள் தொடர்ந்து வரும் நிலையில், 'ஓணம்' வாழ்த்துச் செய்தியில் ஒன்று போலவே இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஓணம் பண்டிகை கேரளாவில் நாளை கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும்.
இந்நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்திகள் தான் தொண்டர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

ஆணவத்தை அழித்திட
ஓணம் பண்டிக்கையையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட 'வாமன அவதாரம்' தரித்த திருமால், தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் கேட்டு, ஓர் அடியை வானத்திலும்; இரண்டாம் அடியை பூமியிலும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

ஓணம் உணர்த்தும் அறிவுரை
'பிறர் வாழ நாம் வாழ்வது', 'ஆணவத்தை அடக்குவது', 'தர்மம் காப்பது', 'பக்தியே முக்தி என்பதை உணர்த்துவது" ஆகியவைதான் ஓணம் திருநாள் நமக்கு உணர்த்தும் அறிவுரைகளாகும். திருவோணப் பண்டிகையின் போது, பத்து நாட்களுக்கு மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கோலமிட்டு, வண்ணப் பூக்களால் அலங்கரித்து, அதன் நடுவே குத்துவிளக்கேற்றி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வதோடு, உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும் இன்புறுவார்கள். திருவோணத் திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று; பசி, பிணி, பகை நீங்கி; அன்பு அமைதி, சகோதரத்துவம் பெருகி; மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என்ற என் விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

செருக்கினை அடக்கிட
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து மூன்றடி மண் தானமாகக் கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவு அளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

ஈபிஎஸ் வாழ்த்து
பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றியும்; புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர். திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று, நம் இதய தெய்வங்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அப்படி சொன்னீங்களே
கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது அதிமுக சார்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தனர். அன்பும், அமைதியும், சகோதரத்துவம் வளரவேண்டும், அகந்தையும், ஆணவமும் அகல வேண்டும் என அவர்கள் வேண்டியிருந்தனர். ஆனால், இப்போது அவர்களுக்கிடையிலேயே அமைதி குலைந்து, சகோதரத்துவம் சிதைந்து, இந்தாண்டு இருவரும் தனித்தனியாக ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்னவொரு ஒற்றுமை
இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்திருந்தாலும், இருவரது வாழ்த்துச் செய்திகளுமே கிட்டத்தட்ட ஒன்று போல் உள்ளன. ஓபிஎஸ், ஆணவத்தை அழித்திட என்கிறார். ஈபிஎஸ், செருக்கினை அடக்கிட என்கிறார். இருவருமே, அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவட்டும் என வாழ்த்தியுள்ளனர். ஒரே மாதிரியான வாழ்த்தால் தொண்டர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். நீங்கள் சொல்லும் அமைதியும், சகோதரத்துவமும் உங்களுக்கும் நிலவட்டும் எனக் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications