திடீர் அழைப்பு.. “2 டார்கெட்”! டெல்லி பார்வை திரும்புதோ? ஓபிஎஸ் பிளானால் எடப்பாடிக்கு பெரிய தலைவலி!
சென்னை : தொடர்ச்சியாக தனது அணியில் நிர்வாகிகளை நியமித்து வந்த ஓபிஎஸ், திடீரென மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை அறிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும்? இதற்குப் பின்னணியில் ஓபிஎஸ் போடும் கணக்குகள் என்னென்ன?
வரும் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்குழுவைக் கூட்டுவது பற்றி விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், அதிமுக இரு அணிகளாகச் செயல்படுவதை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைக்கும் முயற்சியே ஓபிஎஸ்ஸின் இந்த மா.செக்கள் கூட்டம் என்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம், குஜராத் சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்துவிட்டு வந்தபிறகு, இந்த வேலையில் இறங்கியிருப்பதால், இதில் டெல்லியின் கை இருப்பதாக ஈபிஎஸ் நினைக்கிறாராம்.

மா.செக்கள் கூட்டம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ஏற்பட்ட மோதலில் ஓபிஎஸ் - ஈபிஸ் இருவரும் எதிரெதிர் அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் பழனிசாமி vs பன்னீர்செல்வம் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் வரும் 21ஆம் தேதி ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்ற
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது. கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற இரு தரப்பினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் பொதுக்குழு வழக்கு அடுத்தகட்டமாக ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

நிர்வாகிகள் நியமனம்
இதற்கிடையே எடப்பாடியுடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்தாலும் ஒற்றைத் தலைமை தான் என்பதில் பழனிசாமி விடாப்படியாக இருந்து வருகிறார். இதனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தனக்கே முழு அதிகாரமும் இருப்பதாக கூறி அதிமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நிர்வாகிகளை நியமித்து வரும் ஓபிஎஸ், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்திருக்கிறார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில்
அனைத்து மாவட்டங்களுக்கும் புதிதாக நிர்வாகிகளை நியமித்த ஓ.பன்னீர்செல்வம், வரும் 21ஆம் தேதி அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னையில் வரும் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளானை கையில் எடுத்த ஓபிஎஸ்
பழனிசாமி அணிக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை கூட்டி, அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஈபிஎஸ் அணி மற்றும் பாஜக இடையே விரிசல் ஏற்பட தொடங்கியுள்ள நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திட்டத்தில் ஓபிஎஸ் அணி ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2 டார்கெட்
ஜனவரி 4ஆம் தேதி வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு வருவதற்கு முன்பு, அதிமுக இரு பிரிவுகளாகச் செயல்ட்டு வருகிறது என்பதை உச்ச நீதிமன்றத்திடம் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கும் வகையிலேயே தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டும் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார் ஓபிஎஸ் என்று கூறப்படுகிறது. இதில் முக்கியமாக, தலைமைக் கழகத்தின் பெயரில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஓபிஎஸ். இந்த ஆவணங்களை உச்ச நீதிமன்றத்திலும், பொதுக்குழு நடத்தி அதன் முடிவுகளை தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பிப்பது தான் ஓபிஎஸ்ஸின் திட்டமாம்.

ஈபிஎஸ் சந்தேகம்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஓபிஎஸ் ஏற்பாடு செய்திருப்பதன் பின்னணியில், பாஜக மேலிடம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். சமீபத்தில் தான், குஜராத் சென்று பாஜகவின் முன்னணி தலைவர்களைச் சந்தித்து விட்டுத் திரும்பினார் ஓபிஎஸ். பாஜகவுடன் தான் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் செய்வதால், ஓபிஎஸ்ஸை வைத்து தனக்கு எதிராக மூவ் செய்கிறதோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாம்.

எடப்பாடிக்கு தலைவலி
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதால், ஓபிஎஸ்ஸின் இந்த மூவ் நிச்சயம் எடப்பாடிக்கு தலைவலியை ஏற்படுத்தும். இதனால், ஓபிஎஸ்ஸை எப்படி சமாளிப்பது? அடுத்தகட்டமாக எப்படி மூவ் செய்வது என்பது பற்றி தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications