தூள் தூளா சிதறிய கோட்டை.. காங். மிஸ் பண்ணிருச்சே.. பாஜக மெயின் சக்ஸஸே இதான்.. பரிதாப குஜராத் கதர்கள்
குஜராத் சட்டமன்ற தேர்தலின் முடிவுகளில் காங்கிரஸ் மீண்டும் சறுக்கலை சந்தித்து வருகிறது
சென்னை: காங்கிரஸின் இன்னொரு சறுக்கலில் இருந்து, பாஜக மட்டுமல்ல, புதுவரவான ஆம் ஆத்மியும் சேர்ந்து, தலை நிமிர்ந்து எழுகின்றன குஜராத் மாநிலத்தில்..!!
அநேகமாக, 1990-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் காங்கிரஸ் சந்தித்த மோசமான தேர்தலாக இருக்கும்.. ஆனால், அதைவிட இன்றைய நிலைமை மோசமாகிவிடும் போல இருக்கிறது.
இத்தனை காலமும், பாஜகவா? காங்கிரஸா? என்ற அரசியல் நிலைப்பாடு மாறி, பாஜகவா? ஆம் ஆத்மியா? என்று சொல்லக்கூடிய அளவுக்கு காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது.
பாஜகவின் கோட்டைகளை காங்கிரஸ் முறியடிக்கும் என்று நினைத்தால், காங்கிரஸின் கோட்டைகளை ஆம் ஆத்மி நொறுக்கி கொண்டிருக்கிறது... இதற்கு பிரதான காரணம் காங்கிரஸ் கட்சியேதான் என்பதை மறுக்க முடியாது.
இமாச்சலில் முந்திய காங்கிரஸ்.. எம்எல்ஏக்களை பாஜக இழுத்தால் என்ன செய்வது? ஆரம்பித்த ரிசார்ட் அரசியல்
ஷத்திரியாஸ்
ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசுக்கு, ஜாதி அரசியல்தான் உதவி கொண்டிருந்தது.. குறிப்பாக, ஷத்திரியர்கள், தலித், பழங்குடியினர், முஸ்லிம் சமூக மக்களின் வாக்குகள் முழுவதுமே காங்கிரசுக்குதான் என்ற எழுதப்படாத விதியும் ஒருகாலத்தில் இருந்தது.. ஆனால், பாஜக என்ட்ரி தந்ததற்கு பிறகு, தன்னுடைய அரசியல் பாணியையே மாற்றிவிட்டது. சாதிக்கு பதிலாக மதத்தை கையில் எடுத்தது... ஆனால், இது உடனடியாக பாஜகவுக்கு கை கொடுக்கவில்லை என்றாலும், நாளடைவில் ஷத்திரியர்கள், பழங்குடியினர் வாக்குகளை அள்ளும் அளவுக்கு பாஜக கடுமையாக உழைத்தது.
சாதி + மத அரசியல்
உயர்குடி வகுப்புகளை அசால்ட்டாக எடுக்கும் பாஜக, ஷத்திரியர்கள், கோலி, அஹீர், தாக்குர், தர்பார்ஸ், மல்தாரி, ரபாரி, பர்வார் ஆகிய சமூக வாக்குகள் காங்கிரசுக்கு செல்லாதவகையில், அதை பிரிக்கும் வியூகங்களையும் நடைமுறைப்படுத்தியது. சாதி அரசியலிலாவது காங்கிரஸ் தன்னை நிரூபிக்கும் என்று நினைத்தால், அதே சாதி அரசியலில், ஆம் ஆத்மி இன்று மிரட்டி கொண்டிருக்கிறது.. புதிய வரவு என்றாலும், அம்மாநில சாதிகளின் அடிப்படைகளையும், முக்கியத்துவங்களையும் ஆம் ஆத்மி மிக குறுகிய காலத்தில் தெரிந்து கொண்டது. அதனால்தான், மதரீதியிலான பிரசாரத்தை திடீரென கெஜ்ரிவால் கையிலெடுக்கவும், இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை..
கலக்கல்ஸ்
அவர்கள் பாணி பிரச்சாரத்தை, அதுவும் குஜராத்திலேயே, அதுவும் முதல்நாளிலேயே, ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்ற கோஷத்துடன் கெஜ்ரிவால் வெளிப்படுத்தியது, பாஜகவுக்கு லேசான கலக்கத்தையே தந்தது என்று சொல்லலாம். ஒரு இந்துத்துவாவாதியாக கெஜ்ரிவால் பேச்சுக்கள் இருந்ததுடன், புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் போட்டோ, லட்சுமி, விநாயகர் போட்டோ என்றெல்லாம் ட்வீட்களை போட்டு கதிகலங்க செய்துவிட்டார். சவுராஷ்ட்ரா பிராந்தியம், பழங்குடியின பிராந்தியம், மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்கள் என அனைத்துமே காங்கிரஸைவிட்டு நழுவ ஆரம்பித்துவிட்டது.. ஆக, மத அரசியல், சாதி அரசியல் என்ற 2 விஷயங்களிலுமே காங்கிரஸ் கோட்டைவிட்டுவிட்டது.
ஸ்லோ மூவ்
அதேபோல, பாஜக கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு கட்டுமானத்தை குஜராத்தில் வலுவாக உருவாக்கி வைத்துள்ளது.. ஒவ்வொரு பாஜக தலைவர்களின் பேச்சும் அதைதான் உணர்த்திவிட்டு போனது.. பாஜகவின் பிரச்சார வேகத்துக்கு காங்கிரஸால் ஈடுகொடுக்காததும் இன்னொரு காரணம்.. குறிப்பாக, காங்கிரஸ் தலைவரான நசீர் ஹுசைன், தாமதமான பிரச்சாரத்தை பலரும் கவனிக்கவே செய்தனர். மேலும், குஜராத் காங்கிரஸில் நிறைய சிக்கல்களும் இருந்தன.. அவைகள் முழுமையாக களைப்படாமல், வித்தியாசமான பிரச்சாரங்களையும் மேற்கொள்ளாமல், பாஜக ஆம் ஆத்மியுடன் பிரச்சார வேகத்துக்கு இணையாக ஓட முடியாமல் போய்விட்டது.
திரை மறை
அதேபோல, பாஜகவின் குறைகளை பிரச்சாரங்களில் சொல்வது மட்டுமே தங்களுக்கான அரசியல் என்று காங்கிரஸ் நினைத்து கொண்டுள்ளது வருந்தத்தக்கது.. காரணம், பாஜக செய்யும் தவறுகளை, மக்களே நேரடியாக பார்த்து வருகிறார்கள்.. அதை நேரடியாகவே உணர்ந்தும் உள்ளனர். அவர்களின் தவறுகளை குறிப்பிட்டு சொல்வதற்கு ஒரு தேசிய கட்சி தேவையில்லை என்றே தெரிகிறது.. விலைவாசி, வேலையின்மை, பால விபத்து போன்றவைகளை, எவ்வளவு பெரிய திரைகளை போட்டு மறைத்தாலும், மக்களின் பார்வையில் இருந்து அவைகள் தப்பவில்லை.. இதையும் மீறி பாஜக தன்னுடைய வெற்றியை நிலைநாட்டுகிறது என்றால், அந்த சூட்சுமத்தைதான் காங்கிரஸ் கற்க வேண்டி உள்ளது.
புத்துயிர்ப்பு
இந்த முறை ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட களத்தில் பாஜக இறக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி 6 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தது பலராலும் கவனிக்கப்பட்டது.. அவ்வளவு ஏன், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில், பாரத் ஜோடோ யாத்திரையில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக நடைபயணம் மேற்கொண்டதும், வாக்குகளாக மாறும் என்றே கணிக்கப்பட்டது.. ஒருவேளை தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தால், மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை காங்கிரஸ் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் என்ற முடிவு கூட எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவைகளுக்கெல்லாம் வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை.
வெள்ளாடுகள்
குறைந்தபட்சம் தங்கள் கட்சியின் முக்கிய தலைவர்களை தன்னகத்தே வைத்துக் கொள்ளும் சூட்சுமத்தைகூட காங்கிரஸ் அறியாததும் பலவீனமே.. குறிப்பாக, பலதலாலா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பகவான்பாய் டி பரத், காங்கிரஸின் அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்யும் அளவுக்கு துணிந்தார்.. காங்கிரஸ் சார்பில் 10 முறை எம்எல்ஏவாக இருந்த பழங்குடியின தலைவர் மோகன்சிங் ரத்வா ராஜினாமா செய்து பாஜகவுக்கு தாவிய நிலையில், பாஜகவை பற்றி நன்கு அறிந்தும், காங்கிரஸ் இதையெல்லாம் முன்கூட்டியே சுதாரிக்க தவறிவிட்டது.
ஒளிரும் பாஜக
பாஜகவின் தொடர்ச்சியான வெற்றி என்பது மீண்டும் ஒருமுறை குஜராத்தில் நிரூபணமாகி கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சி என்ற வரிசையில் ஆம் ஆத்மிக்கான இடத்தை தந்துவிட்டு, காங்கிரஸ் வழிவிடுவிடுவதுபோலவே தெரிகிறது.. உட்கட்சி பூசல்கள் பாஜகவிலேயே இருந்தாலும்கூட, அவைகளை பொதுத்தேர்தலில் காட்டிக் கொள்ளாத பக்குவம் அக்கட்சிக்கு உள்ளது.. ஆனால், பொதுவெளியிலேயே சட்டையை கிழித்து உருளும் பலவீனம் காங்கிரசுக்கு இன்னமும் உள்ளது.. எப்படி பார்த்தாலும், காங்கிரஸின் தேய்மானங்களில் இருந்துதான், பாஜக வளர்ச்சி ஒளிர்ந்து வருகிறது என்பதே உண்மை..!!