கொரோனா.. மொத்தம் 4 ஸ்டேஜ்.. 3வது ஸ்டேஜிலிருந்துதான் கோரத் தாண்டவம் ஆரம்பம்.. முழு விவரம்
சென்னை: கொரோனா பாதிப்பு மொத்தம் 4 ஸ்டேஜ் கொண்டதாக அறியப்படுகிறது. அதில் இந்தியா தற்போது 2வது ஸ்டேஜில் உள்ளது. அடுத்த ஸ்டேஜுக்கு அது போகக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுகோள்.
ஸ்டேஜ் 1: கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய். வூஹான், இத்தாலி, ஈரானிலிருந்து பிற நாடுகளுக்கு சென்றவர்களுக்கு இப்படி நோய் பரவல் ஏற்பட்டிருந்தால், அது ஸ்டேஜ் 1 என்று அழைக்கப்படுகிறது.
ஸ்டேஜ் 2: பாதித்த நாடுகளிலிருந்து வந்தவர்களுடன் பழகியவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படும். இப்படித்தான் டெல்லியை சேர்ந்த மூதாட்டிக்கு அவரது மகனிடமிருந்து கொரோனா பரவி பலியானார். இந்தியாவில் கொரோனா 2வது ஸ்டேஜில் உள்ளது.
ஸ்டேஜ் 3: அது யாரிடமிருந்து பரவியது என்பதை, கண்டறிய முடியாது. சென்னையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட இரண்டாவது நபருக்கு யார் மூலமோ பரவியது என்பதே, தெரியவில்லை. வெளிநாடு பயணம் செல்லவில்லை இவர். டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயிலில்தான் வந்திருந்தார்.
எனவே சமூக பரவல் எனப்படும் 3வது ஸ்டேஜுக்கு இந்தியா போய்விட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசு, இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், அப்படி எதுவும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டேஜ் 4: சீனா, இத்தாலி, ஈரான் நாடுகளைப் போல, எங்கு.. எவர் மூலமாகப் பரவியது என்பதை அறிய முடியாத வகையில் அதிதீவிரமாக நோய் தொற்று பரவும் நிலை 4வது ஸ்டேஜ் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க பயன்படும் என்95 முகக்கவசங்களை தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புடன் இருப்பவர்கள் என்95 முக கவசம் அணியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதன் விளைவாக முகக்கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், ஒரு முறை பயன்படுத்தப்படும், மாஸ்குகளை, மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால், முகக் கவசங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்படுவதால் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் மாஸ்க் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை புதிய பேருந்து நிலையம், அம்பாசமுத்திரம், ராதாபுரம், ஆலங்குளம், தென்காசி உள்ளிட்ட 6 இடங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 10 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.