எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ரெய்டு.. பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்.. லஞ்ச ஒழிப்புத்துறை பரபர அறிக்கை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் சோதனை நேற்று இரவு முடிவடைந்தது.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது எவை என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக அரசு எடுத்த முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

திமுக ஆயுதம்
ஏனென்றால், மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாக மேற்கொண்ட பிரச்சாரங்களின் முக்கியமான விஷயம் அதிமுக அமைச்சர்கள் மீதான லஞ்ச புகார்கள் தான். இதுதொடர்பாக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை சந்தித்து பெரிய பட்டியல் ஒன்றையும் அளித்தார். இப்போது திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவியதால் முதலில் அதை சமாளிப்பதில் அரசு கவனம் செலுத்தியது. தற்போது அந்த நிலை மாறி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் தங்களது முக்கியமான ஆயுதம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை ஆகிய இரண்டையும் திமுக அரசு கையில் எடுத்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை
அதன் ஒரு பகுதியாக லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிமுக அரசியல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும் அந்த கட்சியின் கரூர் மாவட்ட செயலாளருமான எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள், வீடு, ஆதரவாளர்கள் வீடுகள் அலுவலகம் என மொத்தம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையை நேற்று இரவு வரை நீடித்தது.

பல குழுக்கள்
கரூரிலுள்ள அவரது வீடு, தொழில் நிறுவனங்கள், அவரின் சகோதரர் வீடு, நிறுவனங்கள் எனச் சுமார் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி பவானீஸ்வரி தலைமையில், 20 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்ட நிலையில், சென்னையிலும் சோதனை நடந்துள்ளது.

ரெய்டு பின்னணி
கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் 8 நிறுவனங்களிடம் இருந்து ஜி.பி.எஸ் கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஜி.பி.எஸ் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடையும் விதித்தது. இந்த விவகாரத்தில் தி.மு.க தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டநிலையில், இந்த ரெய்டு நடந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டது என்ன
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது பணிக்காலத்தில் அவரது பெயர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் பெயரிலும், விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த சோதனையில், ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

ஆதரவாளர்கள் முற்றுகை
இதனிடையே சோதனை நடத்தி விட்டு இரவு தங்கள் அலுவலகங்களுக்கு திரும்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் வாகனத்தை வழிமறித்து விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். அதிகாரிகளின் வாகனங்கள் முற்றுகையிடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தலையிட்டு அவர்களை கலைத்து விரட்டியடித்தனர்












Click it and Unblock the Notifications