கோயம்பேடு டூ பட்டாபிராம் மெட்ரோ ரயில்.. விரிவான திட்ட அறிக்கை சமர்பிப்பு.. ஆவடி அறிய வேண்டியவை
சென்னை: சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ இரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்டஅறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே.கோபால் ஐஏஎஸ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.21.76 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க ₹9744 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை மெட்ரோ இரயில் போக்குவரத்து அமைப்பை நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.02.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்மொழியப்பட்ட மெட்ரோ வழித்தடம், தற்போதுள்ள கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் தொடங்கி, பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராமில்(Outer Ring Road - வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது, இது அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் அம்பத்தூர் OT, ஆவடி இரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை (ORR) போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும். திட்ட செலவு மற்றும் செயல்படுத்தும் நேரத்தை மேம்படுத்துவதற்காக இது மூன்று இடங்களில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து நிலையத்திற்கு முன்னால்) நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:
• வழித்தடத்தின் மொத்த நீளம்: 21.76 கி.மீ
• உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 19
• மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,744 கோடி. (மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்பு உட்பட)." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மொத்தம் உள்ள 21.76 கி.மீ நீள மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்படஉள்ளது. பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராமை இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அடைகிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்றால். அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓடி, ஆவடி ரயில் நிலையம், சென்னை அவுட்டர் ரிங்க் ரோடு ஆகிய இடங்களுக்கு மெட்ரோ ரயிலில் எளிதாக செல்ல முடியும். தற்போதைய நிலையில் சோழிங்கநல்லூரில் வேலை செய்யும் அம்பத்தூர்வாசி ஒருவர், தன் பயணித்திற்காக தினமும் மிகப்பெரிய சவாலை சந்தித்திருப்பார். இன்னும் சில ஆண்டுகளில் தென்சென்னைக்கு வடசென்னை மக்கள் எந்த போக்குவரத்து நெருக்கடியும் இன்றி வந்து செல்ல முடியும். 2028ம்ஆண்டில் எல்லாம் சென்னை அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருக்கும். மயிலாப்பூரும், பரங்கிமலையும், திநகர் பனகல்பார்க் ரயில் நிலையமும் சென்னை மெட்ரோவின் அடையாளமாக இருக்க போகிறது.












Click it and Unblock the Notifications