கூகுளே 'குழம்பும்' வார்த்தைகளால்.. பாஜக "ரெட்டியை" புரட்டியெடுத்த பிடிஆர்! என்ன இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கூறிய பாஜக நிர்வாகிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த வாரம் அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.
இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 45 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
“மோசமா செயல்படுற நீங்க எங்களுக்கு அறிவுரை சொல்லலாமா?” - மத்திய அரசை வெளுத்த அமைச்சர் பிடிஆர்!
பிடிஆர் பதிலடி
இந்த நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க சொன்னதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கோரிக்கைக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி அளித்துள்ளார். அதில், மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது. ஏற்கனவே நீங்கள் கலால் வரியை குறைத்து உள்ளீர்கள். வாட் வரி என்பது கலால் வரி உள்ளிட்ட அனைத்து வரிகள் மீதும் போடப்படும் வரிதான்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து
கலால் வரியை குறைத்தால் தானாக மாநில அரசுக்கான வருவாயில் இழப்பு ஏற்படும். பிடிஆர், தமிழ்நாடு வாட் வரி என்பது பெட்ரோல், டீசல் விலை மற்றும், மத்திய அரசு வரிகள் மீதான மொத்த வரியாகும். எனவே மத்திய அரசு வரியை ஒரு ரூபாய் குறைத்தால் தானாக மாநில வரி பெட்ரோலுக்கு 13 பைசா, டீசலுக்கு 11 பைசா குறையும் என்று விளக்கி உள்ளார். இதனால் மாநில அரசு வரியை குறைக்க முடியாது என்றும் பிடிஆர் கூறியுள்ளார்.
பாடம் எடுக்க வேண்டாம்
அதோடு தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாட்டின் நிதி நிலைமை தேசிய நிலைமையை விட நன்றாக உள்ளது. எங்களின் பண வீக்கம் தேசிய அளவை விட குறைவாக உள்ளது. புள்ளிவிவரங்களின்படி தனிநபர் வருவாய்,பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் என எதிலும் தமிழ்நாடு தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ள நிலையில்,மாநில அரசு என்ன செய்யவேண்டும் என்பது குறித்து யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை என பிடிஆர் பல்வேறு வடஇந்திய ஊடகங்களில் குறிப்பிட்டு உள்ளார்.
பாஜக ரெட்டி
இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் வளர்ப்பு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பிடிஆரை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார். ஒரு மாநிலத்தை எப்படி முழு நாட்டோடு ஒப்பிட முடியும்? முட்டாள்தனமாக பேசாதே. தமிழகத்தில் எரிபொருள் வரியை குறைக்க வேண்டும்., என்று குறிப்பிட்டார். இதற்கு பிடிஆர் கொடுத்தால் பதில்தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
என்ன சொன்னார்?
இதற்கு பிடிஆர் அளித்துள்ள பதிலில், சரி செய்யவே முடியாத, மிக மோசமான கொள்கை கொண்ட முட்டாளான இவரை இதுவரை பிளாக் செய்யாததற்காக என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். அவருடைய முட்டாள்தனமான கருத்துக்கள் என்னுடைய டைம் லைனில் வந்ததற்கு என்னுடைய பின்தொடர்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. நிறுத்திக்கொள்கிறேன் என்று பிடிஆர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான ஆங்கிலம்
இதற்கு பிடிஆர் சில கடினமான ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். முக்கியமாக திருத்த முடியாத முட்டாள் என்பதை சொல்லை Irredeemable ( சரி செய்ய முடியாத) Uber (மிக பெரிய - உயரிய) Dolt (முட்டாள்) என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். நெட்டிசன்கள் பலர்.. பிடிஆர் என்ன கூகுள் டிரான்ஸ்லேட்டில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி திட்டுகிறார் என்று காமெடியாக கேட்டுள்ளனர்.