2024 மக்களவை தேர்தலில் களமிறங்கும் துரை வைகோ? வந்து விழுந்த கேள்வி.. அவர் சொன்ன பதிலை கேளுங்க
சென்னை: மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ திருநெல்வேலியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு அவர் கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் முதலில் இருந்த வைகோ, அங்கு வாரிசு அரசியல் முன்னெடுக்கப்படுவதாகச் சொல்லி, திமுகவில் விலகி மதிமுகவை தொடங்கினார். இப்போது வைகோ மீதும் அதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
மதிமுக தொடங்கப்பட்ட பல ஆண்டுகளாக வைகோ குடும்பத்தினர் யாரும் கட்சிக்கு வரவில்லை. ஆனால், இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக மாற தொடங்கியது. வைகோவின் மகன் துரை வைகோ கட்சிக்குள் கொண்டு வரப்பட்டார்.

துரை வைகோ
கட்சியில் இணைந்து கொஞ்ச மாதங்களிலேயே துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் என்று பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்குக் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குடும்ப அரசியலை எதிர்த்து புதிய கட்சியைத் தொடங்கிய வைகோ இப்படிச் செய்யலாமா என்றும் பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், மதிமுகவில் இருந்து பல மாவட்ட நிர்வாகிகளும் கூட விலகினர். இருப்பினும், துரை வைகோ மதிமுகவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.

பேரணி
இந்தச் சூழலில், திருநெல்வேலியில் மதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, "மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு மதகு சீரமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு, கேரள அரசுகளிடம் மதிமுக கட்சி சார்பில் வலியுறுத்தப்படும்.. மேலும் வருகின்ற பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கரன்கோவிலில் பேரணி நடத்தப்பட உள்ளோம்.

மத்திய அரசே காரணம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். மேலும் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதே மதிமுக கட்சியின் நிலைப்பாடு.. தமிழ்நாட்டில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லாததே காரணம்" என்றார்.

2024 தேர்தலில் போட்டி
மேலும், மத்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதிகளை முறையாக ஒதுக்குவது இல்லை என்று தெரிவித்த அவர் திமுக அரசு ஆட்சி முடிவதற்குள் நிச்சயம் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று தெரிவித்தார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதைத் தலைமை முடிவு செய்யும் என்றார். தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்தும் மதிமுக தலைமை முடிவெடுக்கும் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.

மதிமுக
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் இருந்து மதிமுக போட்டியிட்டது. ஈரோட்டில் கனேஷ மூர்த்தி களமிறங்கினார். அவர் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்த மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் துரை வைகோ மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்துக் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications