திமுக நிர்வாகிகளை ‘அலெர்ட்’ செய்த ஸ்டாலின்.. சீரியஸ் மேட்டர்! பின்னணியில் டாப் சீக்ரெட் ரிப்போர்ட்!
: தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள், அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். திமுக சீனியர் அமைச்சர் துரைமுருகன் சில வாரங்களுக்கு முன்பு பாஜக பற்றி எச்சரித்த நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினும், பாஜக பற்றி 'வார்னிங்' கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னணியில் இருப்பது ஸ்டாலின் கைக்குப் போன உளவுத்துறை ரிப்போர்ட் தானாம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள். தேர்தலில் வெற்றிபெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். அவர்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். மேலும், 23 அணி நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்பை பெருமையாக கருதிக் கொள்ளாமல் களத்தில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக தீவிரம்
நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக நாடு முழுவதும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கணிசமான இடங்களை பெற்றே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம், ஆலோசனைக் கூட்டங்கள் என பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகின்றனர் பாஜகவினர். பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி மேலிட தலைவர்களும் அவ்வப்போது தமிழகம் வந்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுச் செல்கின்றனர். நேற்று கூட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கோவையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பிசாசு போல பாஜக
சமீபத்தில் வேலூரில் திமுக கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், இதுவரை நமது எதிரி அதிமுகவை எதிர்த்தோம். இந்த முறை நாம் ராட்சசனை பார்க்கப் போகிறோம். பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக. இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்க்கப் போகிறோம். பணம் மற்றும் அதிகார பலத்தோடு போராடுவார்கள். அதனை நாம் முறியடிக்க வேண்டுமென்றால், நாம் பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்க வேண்டும். தேர்தல் எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும் அதனை நாம் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் எனப் பேசினார்.

ஒப்புதல்
தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவின் மூத்த அமைச்சர் ஒருவரே, பாஜகவின் வளர்ச்சியை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தமிழ்நாட்டில் ஒருபோதும் வளரவே முடியாது, தாமரை ஒருபோதும் வளராது என ஒருபக்கம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், பாஜகவின் பலம் அபாயகரமானதாக வளர்ந்து வருவதாகவும், பாஜகவை எதிர்க்க திமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்கிற ரீதியிலும் அமைச்சர் துரைமுருகன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலினும், இதேபோன்ற கருத்தை உதிர்த்துள்ளார்.

ஸ்டாலின் ஆலோசனை
இன்று திமுகவில் உள்ள 23 அணிகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட 11 குழுக்களின் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுகவில் உள்ள அனைத்து அணிகளுக்கும் சமீபத்தில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த அணிகளின் நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாஜக எதையும் செய்ய தயங்காது
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கட்சியின் அணிகளில் வழங்கப்பட்ட பொறுப்பை பெருமையாக கருதிக்கொண்டு இருக்காமல் களத்தில் பணியாற்ற வேண்டும் எனறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார்.

கடுமையாக பாடுபட வேண்டும்
அ.தி.மு.க - பாஜக கட்சியினரின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நமது பிரசாரம் அமைய வேண்டும். அ.தி.மு.க எந்த வகையில் கூட்டணி அமைத்தாலும் மக்களிடம் அது எடுபடாது. அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் நமது ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் தி.மு.க தொடர்ந்து வெற்றி பெற்று வந்ததை போல் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க 40 இடங்களிலும் வெற்றி பெற நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். அதற்கேற்ப உங்கள் செயல்பாடு அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைவரும் சொல்லிட்டாரே
ஏற்கனவே துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்கள், பாஜக பூதாகரமாக வளர்ந்து வருகிறது, அதனை எதிர்கொள்ள நாம் வலுவாக இருக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், தற்போது திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும், பாஜகவின் செயல்பாடுகள் பற்றி திமுகவினருக்கு எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்றும் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பின்னணியில் ரிப்போர்ட்
பாஜகவின் தேர்தல் வியூகங்கள் பற்றிய உளவுத்துறை ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலின் கைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி பணிகளில் மற்ற எல்லா கட்சிகளை விடவும் தீவிரம் காட்டி வருவது தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்கிற ரீதியில் உளவுத்துறை ரிப்போர்ட் எச்சரித்துள்ளதாம். அந்த ரகசிய அறிக்கையின் அடிப்படையிலேயே, பாஜக பற்றி ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் 'வார்னிங்' செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications