பிரச்சனை பண்றாங்க.. சிம்பு கண்ணீர்விட்டது இதற்குத்தானா? நடு இரவில் மாநாடு மீட்டிங்- நடந்தது என்ன?
சென்னை: ஒருவழியாக நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தின் ஸ்பெஷல் ஷோ ரத்தான நிலையில் தற்போது 7 மணி காட்சிகள் பல தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியாகுமா என்பது இன்று அதிகாலை வரை பிரச்சனையாகவே இருந்தது.. சிம்பு ரசிகர்களை பதைபதைப்பில் வைத்திருந்த இந்த ரிலீசுக்கு பின் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதில் நிறைய பிரச்சனை. இடையில் சிம்பு வெளியேறியது, அவரின் உடல் எடை பிரச்சனை, மீண்டும் சிம்பு உள்ளே வந்தது, அதன்பின் லாக்டவுன் பிரச்சனை, தியேட்டருக்கு தீபாவளிக்கு வரும் முன் தள்ளிப்போனது, பின்னர் மீண்டும் தியேட்டர்களில் கொண்டு வரப்பட்ட வேக்சின் கட்டுப்பாடு என்று பல்வேறு காரணங்களால் படத்திற்கு நேரடியாக சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் படம் ரிலீஸ் ஆகும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் தள்ளிப்போவதாக அறிவித்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் மாநாடு திரைப்பட வெளியீடு தள்ளி போகிறது என்று குறிப்பிட்டார்.
கொங்குவிலிருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்.. எடப்பாடி பழனிச்சாமி செம அப்செட்.. தென் மண்டலம் ஹேப்பி!
ரசிகர்கள் கொந்தளிப்பு
இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் கொந்தளித்து போனார்கள். படத்திற்காக இவ்வளவு நாள் காத்து இருந்தோம். முதல் நாள் காட்சி எல்லாம் புக் செய்து இருந்தோம் என்று கொந்தளித்து போனார்கள். இதையடுத்துதான் சிம்புவின் படத்திற்கு அரசியல் ரீதியாக நெருக்கடி தரப்படுகிறதா என்றும் கேள்விகள் ரசிகர்கள் மூலம் எழுப்பப்பட்டது. சிம்புவிற்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் தருகிறார்கள், அதுதான் ரிலீஸ் தள்ளிப்போக காரணம் என்று ரசிகர்கள் பலர் ட்வீட் செய்து வந்தனர்.
காரணம் என்ன?
இந்த நிலையில்தான் மாநாடு படம் ரிலீஸ் தள்ளிப்போக அப்படி என்னதாங்க பிரச்சனை என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது அவர்கள் சொன்ன விஷயம்.. பைனான்ஸ் பிரச்சனை. அதாவது இந்த படம் திடீரென சிக்கலுக்கு உள்ளாகவும், இதற்கு முன் தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போகவும் ஒரே காரணம்தான். பைனான்ஸ் ரீதியாக தயாரிப்பாளர் தரப்பும் நடிகர் சிம்பும் கொடுக்க வேண்டிய பணம் காரணமாக படம் தள்ளிப்போனது என்று கூறுகிறார்கள்.
சிக்கல் இதுதான்
'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் பிரச்சனை காரணமாக ஒரு பக்கம் மைக்கேல் ராயப்பன் நஷ்ட ஈடு கேட்டு வருகிறார். இதனால்தான் தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போனது. தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வதில் இதனால் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல்தான் இப்போதும் படத்தை வெளியே கொண்டு வர போதிய பைனான்ஸ் இல்லாத பிரச்சனை காரணமாக படத்திற்கு நேற்று சிக்கல் ஏற்பட்டது. நேற்று இந்த பிரச்சனை காரணமாக, கையில் போதிய பணம் இல்லாததாலும் சுரேஷ் காமாட்சி படம் தள்ளிப்போகிறது என்று அறிவித்து இருக்கிறார்.
படம் தள்ளிப்போகிறது
பணத்தை இரவுக்குள் புரட்ட முடியாது என்று சுரேஷ் காமாட்சி நினைத்த காரணத்தால் இப்படி தள்ளிப்போடும் முடிவை எடுத்து இருக்கிறாராம். ஆனால் அப்போதுதான் திடீரென ஒரு பெரிய ஓடிடி நிறுவனம் பணம் கொடுத்த பணத்தை வாங்க முன் வந்துள்ளது. இதனால் சுரேஷ் காமாட்சிக்கு பைனான்ஸ் பிரச்சனை தீரும் சூழல் உருவாகி உள்ளது. இன்னொரு பக்கம் இரண்டு டிவி சேனல்கள் சேட்டிலைட் உரிமைகளை வாங்க முண்டியடித்து உள்ளன.
அதிக தொகை
இதனால் மாநாடு படம் தொடர்பாக இரவு முழுக்க மீட்டிங் சென்றுள்ளது. அப்போதுதான் சுரேஷ் காமாட்சி தியேட்டர் விநியோகஸ்தர்களுக்கு போன் செய்து.. டிக்கெட்டை டிபன்ட் செய்ய வேண்டாம். காத்திருங்கள். படம் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனால் படம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்தது. பின்னர் இரவு முழுக்க படத்தை எவ்வளவு கோடிக்கு சேட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமைக்கு விற்பது என்று ஆலோசனை செய்துள்ளனர்.
ஓடிடி
இதில் சுமுகமான முடிவு எட்டப்பட்ட நிலையில் பைனான்ஸ் பிரச்சனை தீர்க்கப்பட்டு காலை 5 மணி காட்சி உறுதி செய்யப்பட்டது. ஆனால் காலையில் படம் வெளியாகும் சில நிமிடங்களுக்கு முன் ஓடிடியில் வெளியாகும் ரிலீஸ் தேதி குறித்து சாட்டிலைட் சேனல் அதிருப்தி வெளியிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மீண்டும் அவசர மீட்டிங் நடத்தி உள்ளனர். இதில் சாட்டிலைட் சேனலில் வெளியான பின்தான் ஓடிடியில் கொண்டு வர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
Recommended Video
முடிவு
இதையடுத்து 6 மணிக்கு என்ஓசி வாங்கப்பட்டு 7 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. இதுதான் படத்தின் மொத்த பிரச்சனை பின்னணி. இப்படி பல இடங்களில் இருந்து பைனான்ஸ் அழுத்தம், சிக்கல் மேல் சிக்கல், மோதல் மேல் மோதல், உதவ யாரும் இல்லை என்ற காரணத்தால்தான் மாநாடு இசை வெளியீட்டு விழாவில் எனக்கு பிரச்சனை தாராங்க.. பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிம்பு கூறியதாக தெரிகிறது. இந்த படம் தொடங்கியதில் இருந்தே பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக இன்று தியேட்டர்களுக்கு வந்துள்ளது.