“உடனடியாக அமலுக்கு வரும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு” - என்ன காரணம்? - விளாசும் காங்கிரஸ் எம்பி!
சென்னை: பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அதிரடியாக அறிவித்தார்.
Recommended Video
கலால் வரி குறைப்பின் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு திடீரென பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடிவெடுத்துள்ளதற்கு என்ன காரணமாக இருக்கும் என விவாதங்கள் கிளம்பியுள்ளன.
“மக்கள்தான் முக்கியம்.. மத்தது அப்புறம்தான்” - பெட்ரோல் விலை குறைப்பு பற்றி பிரதமர் தட்டிய ட்வீட்!
பெட்ரோல் டீசல் விலை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மீண்டும் உயர்ந்தது. அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்து வருகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை குறைப்பு
இந்நிலையில், பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், வாகன ஓட்டிகள் வெகுவாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். டீசல் விலை குறைப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் என்ன
பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் மவுனம் சாதித்து வந்த மத்திய அரசு தற்போது ஒரேயடியாக பெட்ரோல் விலையை ரூ.9.50, டீசல் விலையை ரூ. 7 குறைத்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கலால் வரி இழப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி காரணம்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு முடிவு குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க அமைச்சர்கள் பலரும் பெருமையாக ட்வீட் செய்து வருகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சியினர் இது எதற்கான திட்டம் என சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "திமிர் பிடித்த நிர்மலா சீதாராமன் கடைசியில் தனது பிடிவாதத்தைக் கைவிட்டுள்ளார். ஒரு நபர் பாராளுமன்றத்திற்கு வெளியே தொடர்ந்து குரல் எழுப்பி ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்துடன் நின்றார், அவர் ராகுல் காந்தி" எனத் தெரிவித்துள்ளார்.
அம்பலப்படுத்தியதற்கு நன்றி
மேலும், இந்த கலால் வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், மோடி சர்க்கார் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வரி விதிப்பதன் மூலம் இவ்வளவு நாளாக 1 லட்சம் கோடி ரூபாயை பெரும் பணக்காரர்களுக்கு வழங்கியதை அம்பலப்படுத்தியதற்கு நன்றி எனவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காரணமா
மேலும், இன்னும் சிலபல மாதங்களில் குஜராத் தேர்தல் வரவிருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைத்துள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநேரம், குஜராத் தேர்தலுக்கும் பல மாதங்கள் இருக்கின்றன.. வெகுசமீபமாக தேர்தல் எதுவும் வரவில்லையே.. மத்திய அரசு ஏன் இப்படி திடீர் முடிவு எடுத்திருக்கிறது எனப் பலரும் குழம்பிப் போய் உள்ளனர்.