நின்ற மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் ஆனது.. விவேக் இறந்தது எதனால்?.. சிம்ஸ் டாக்டர்
சென்னை: பேச்சு மூச்சு இல்லாமல் வந்த நடிகர் விவேக்கின் மூச்சை மீண்டும் கொண்டு வர 45 நிமிடங்கள் காலதாமதம் ஆனது. எனினும் உயர் தர சிகிச்சைகள் அளித்தும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை என சிம்ஸ் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் நேற்று முன் தினம் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விவேக்கிற்கு இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போனது.. சிம்ஸ் மருத்துவர் விளக்கம்
காலை 11 மணி
இதுகுறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் மருத்துவர் ராஜு சிவசாமி தனியார் இணையதளம் ஒன்றிக்கு பேட்டி அளிக்கையில் நேற்று முன் தினம் காலை விவேக் தனது குடும்பத்தினரிடம் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் காலை 11 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
நாடித்துடிப்பு
அப்போது அவர் சுயநினைவிழந்த நிலையில்தான் வந்தார். அவருக்கு நாடித்துடிப்பே இல்லை. மூச்சும் இல்லை. ரத்த அழுத்தத்தையும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று ஆக்ஸிஜன் கொடுத்து, கார்டியாக் மசாஜை 30 முறை செய்து அவரது இதயத்தை இயங்க வைக்க போராடினோம்.
எக்மோ கருவி
இதன் பலனாக மூச்சை மீண்டும் கொண்டு வருவதற்கு 45 நிமிடங்கள் ஆகிவிட்டது. இதன் பின்னர் அவரை கேத்லாபிற்கு கொண்டு சென்று ஆஞ்சியோ செய்தோம். அவருக்கு 100 சதவீதம் இதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தோம். இதையடுத்து அவரது இதயத்தை இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்தி அடைப்பை சரி செய்தோம்.
சிடி ஸ்கேன்
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து சிடி ஸ்கேன் எடுத்தோம். அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. பின்னர் எக்மோ கருவியின் உதவி இல்லாமல் அவரது இதயத்தை இயங்க வைக்க ஐசியூவில் வைத்து சிகிச்சை அளித்தோம். எனினும் முடியவில்லை என்றார் மருத்துவர்.