பகீர் ஒற்றுமை.. கொரோனாவால் மரணித்த 10 பேர்.. அதிர வைக்கும் தகவல்கள்.. ரொம்ப கவனமா இருங்க மக்களே!
கொரோனாவால் மரணித்த 10 இந்தியர்களுக்குள் ஒற்றுமை உள்ளது
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்று சொல்லி 10 நாள்கூட ஆகவில்லை.. 10 பேர் இந்த வைரஸ் தாக்கி அகால மரணமடைந்துள்ளனர்.. எங்கோ சீனா, இத்தாலியில் நடந்த இறப்புகள் குறித்து கவலைப்பட்டு கொண்டிருந்த நாம், இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை இழந்து தவித்து வருகிறோம்.
உலகை இதுவரை அச்சுறுத்திய பல நச்சுக்கிருமிகளை முறியடித்தது போலவே, இந்த கொரோனாவையும் வெற்றி கொள்ள மருத்துவ விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் போராடி கொண்டு இருக்கிறார்கள்.. அதேபோல ஒருங்கிணைந்த நடவடிக்கைகளாலும், நாட்டு மக்களின் ஒத்துழைப்புகளாலுமே இதை முறியடிக்க வேண்டி உள்ளது. அதனால்தான் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகளுக்கு செவி சாய்த்து வருகிறோம்.
தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் 10 பேரை காவு வாங்கி உள்ளது. இவர்களின் மரணம் அடுத்தடுத்து நிகழ்ந்ததுதான் நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.. ஒரு நபருக்கு தொற்று உறுதி என்று சொல்கிறார்கள் என்றால், அடுத்த நாளே இவர்களை பற்றின மரண செய்தி நமக்கு எட்டிவிடுகிறது.. வைரஸின் தீவிரத்தை இது பிரதிபலிக்கிறது. அந்த வகையில் 10 இந்தியர்கள் இறந்துள்ளனர்..
இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது.. அது வயதுதான்.. மரணடைந்த 9 பேரில் ஒருவர் மட்டுமே 40 வயதுக்கு உட்பட்டவர். மற்ற அனைவருமே 55 வயதைக் கடந்தவர்கள். அதிலும் ஒருவர் மட்டுமே 60 வயதுக்கு உட்பட்டவர். மற்றவர்கள் 60-ஐ தாண்டியவர்கள்.... மரணமடைந்தவர்களில் ஒருவர் மட்டுமே பெண். மற்ற அனைவருமே ஆண்கள்தான்.
பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு, பிபி பிரச்சினைகள் இருந்துள்ளன. அதில் சிலர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். அதனால்தான் வயதானவர்களை கூடுதலாக நாம் கவனித்து அக்கறை காட்ட வேண்டி உள்ளது. இறந்தவர்களின் விவரத்தை கூடுமானவரை தொகுத்து தந்துள்ளோம். அவைதான் இது:
கர்நாடகா - 76 வயசு முதியவர். இவர்தான் முதல் மரணம் - மார்ச் 13ம் தேதி இவர் மரணடைந்தார். இவர் கர்நாடகத்தின் காலபர்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சவூதி அரேபியாவுக்கு உம்ரா புனித யாத்திரை போய் விட்டுத் திரும்பிய இவருக்கு நோய்த் தொற்று இருந்துள்ளது. இதையடுத்து ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டு அங்கு பரிசோதனைக்குப் பின்னர் தனிமையில் வைத்திருக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் வீடு திரும்பியதும் உடல் நிலை மோசமாகவே மீண்டும் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டு அங்கு மரணமடைந்தார்.
டெல்லி - 68 வயது பெண்டெல்லியில் மார்ச் 14ம் தேதி மரணமடைந்தார். இவருக்கு சர்க்கரை வியாதி மற்றும் பிபி பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார். ராம் மனோஹர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 14ம் தேதி மரணமடைந்தார்.
பீகார் - பீகாரைச் சேர்ந்த சைப் அலி என்ற 38 வயது நபர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்தார். இவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மார்ச் 22ம் தேதி அதாவது மக்கள் ஊரடங்கு நடந்த தினத்தன்று மரணமடைந்தார். இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குஜராத் - குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். சூரத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த முதியவர் மரணமடைந்தார். இவர் ஆஸ்துமா, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே அவதிப்பட்டு வந்தவர். இவர்தான் குஜராத்தில் முதல் கொரோனா மரணம். மார்ச் 22ம் தேதி இவர் மரணமடைந்தார். இவர் ஜெய்ப்பூர், டெல்லிக்கு அடிக்கடி போய் வரக் கூடியவர். மார்ச் 17ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் மார்ச் 22ம் தேதி மரணமடைந்தார்.
பஞ்சாப் - மார்ச் 19ம் தேதி பஞ்சாபைச் சேர்ந்த 72 வது முதியவர் மரணமடைந்தார். இவர் ஜெர்மனியிலிருந்து இத்தாலி வழியாக சண்டிகர் வந்தவர். இவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சண்டிகரில் உள்ள பங்கா கம்யூனிட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவருக்கு சர்க்கரை வியாதியும், பிபியும் ஏற்கனவே இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவருக்கு மாரடைப்பால் மரணம் நேர்ந்தது.
மேற்கு வங்கம் - கொல்கத்தாவில் 57 வயதான ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் 23ம் தேதி மரணமடைந்தார். இவர் டம் டம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மார்ச் 21ம் தேதி நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இவர் இத்தாலிக்குப் போய்விட்டு திரும்பியவர் என்று தெரிய வந்தது. இவரும் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இமாச்சல் பிரதேசம் - இமாச்சல் பிரதேசத்தின் கங்க்ரா பகுதியைச் சேர்ந்த 69 வயது ஆண் ஒருவர் மார்ச் 23ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணடைந்தார். இவர் திபெத்தைப் பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவிலிருந்து டெல்லி வழியாக திரும்பியவர். இவர்தான் கடைசியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மரணடைந்த இந்தியர் ஆவார்.
மகாராஷ்டிரா - மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். முதல் மரணம் மார்ச் 17ம் தேதி ஏற்பட்டது. 64 வயதான முதியவர் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் மரணத்தைத் தழுவினார். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர் ஆவார். மார்ச் 22ம் தேதி மகாராஷ்டிராவில் 2வது மரணம் சம்பவித்தது. மும்பையைச் சேர்நத் 63 ஆண் மரணமடைந்தார்.
இதில் 10வது நபர் பற்றின தகவல் சரியாக நமக்கு கிடைக்கவில்லை.. எனினும் நம் வீடுகளில் இருக்கும் பெரியவர்கள், சர்க்கரை நோய், இருதய நோய், காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும்.. அவர்களுக்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி என்பதும் குறைவாகத்தான் இருக்கும்.. ஏற்கனவே மருந்துகளையும் உட்கொண்டு வருபவர்கள் என்பதால், பலவீனமாகவும் இருப்பார்கள். அதனால் இந்த 10 பேரின் மரண ஒற்றுமை நமக்கு ஒரு பாடத்தைத்தான் கற்று கொடுத்துவிட்டு போயுள்ளது!